84% தலித், ஓபிசி மக்களுக்கு உயர் பதவிகளில் உட்கார தகுதி, உரிமை இல்லையா? பிரியங்கா 'திராவிட முழக்கம்'
ராய்ப்பூர்: நாட்டின் 84% தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர் பதவிகளில் உட்கார தகுதி அற்றவர்களா? அவர்களுக்கு ஏன் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக சில கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்- பாஜக இடையேதான் நேரடிப் போட்டி இருந்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பேசியதாவது: சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது, பீகாரைப் போல ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். பீகாரில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அம்மாநிலத்தில் தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் 84% உள்ளனர். ஆனால் இவர்களுக்கு உயர் பதவிகளில் ஏன் பிரதிநிதித்துவம் இல்லை? இவர்களுக்கு உயர் பதவிகள் வகிக்க தகுதி இல்லையா? உரிமை இல்லையா?
இந்திய நாட்டின் விவசாயிகளுக்கு ஒருநாள் வருமானம் வெறும் ரூ27. ஆனால் பிரதமர் மோடியின் நண்பர்களான அதானியும் அம்பானியும் ஒரு நாளைக்கு ரூ1600 கோடி சம்பாதிக்கின்றனர். இந்த தேசத்தின் சொத்துகளை அதானி- அம்பானிகளிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் மூலம் பாஜவுக்கு பணம் திருப்பிவிடப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட ரூ20,000 கோடி; சர்வதேச மாநாட்டு வளாகத்துக்கு ரூ27,000 ஒதுக்கீடு செய்து செலவு செய்யும் பிரதமர் மோடியால் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு நிதி ஒதுக்க முடியாதாம். பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து வருகிறார். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஏழை, நடுத்தர மக்கள் மீது எந்த ஒரு அக்கறையுமே கிடையாது. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.
ராஜஸ்தானில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்திலும் பீகார் பாணியில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications