கேப்பே விடாமல் கன்னட விவசாயிகள் போராட்டம்- தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு!
மண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகா விவசாயிகள் இன்று மண்டியாவில் போராட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடகா, காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடிநீரைத் திறந்துவிட வேண்டும். ஏறனவே காவிரி மேலாண்மை ஆணையமும் 2 முறை இது தொடர்பாக உத்தரவிட்டிருந்தது. காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதற்கு எதிராக கன்னட விவசாயிகள், பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தொடர் போராட்டங்கள் நடத்தின. மண்டியா மாவட்டத்தில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூரில் நேற்று பாஜக தலைவர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து வரும் 26-ந் தேதி பெங்களுரில் பந்த் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு 100க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள், சங்கங்கள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெங்களூரில் செப்டம்பர் 26-ந் தேதி பிரம்மாண்ட பேரணிக்கும் விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்பின் வாட்டாள் நாகராஜ் பேசி வருகிறார். இதனால் பெங்களூரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே போராட்டங்களை வன்முறையில்லாமல் அமைதியாக நடத்துங்கள்; வன்முறைகள் நிகழ்ந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒதுங்கி நிற்கிறது. காவிரியில் நீர் திறக்காமல் விட்டால் முன்பு ராணுவத்தை கர்நாடகாவுக்கு அனுப்பியதைப் போன்ற நிலைமை உருவாகும் எனவும் கர்நாடகா காங்கிரஸ் அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
ஆனால் கர்நாடகா காங்கிரஸ் அரசு, திமுகவுடனான கூட்டணிக்காக காவிரி நீரை திறந்துவிட்டுவிட்டது. இது கன்னட விவசாயிகளுக்கு செய்யும் பெரும் துரோகம் என பாஜக, மதச்சார்பற்ற கட்சிகள் விமர்சிக்கின்றன.
இந்நிலையில் இன்றும் மண்டியா மாவட்டத்தில் கன்னட் விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். கர்நாடகா , தமிழ்நாடு அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications