நபிகள் நாயகம் மீது அவதூறு: நுபுர் சர்மா தலையை வெட்ட உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கைது
ஶ்ரீநகர்: இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் மீது அவதூறு விமர்சனங்களை முன்வைத்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கபூர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபிகள் நாயகத்தை பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா டிவி விவாதமமொன்றில் அவதூறாகப் பேசினார். இது மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஈரான், ஈராக் உள்ளிட்ட 14 நாடுகள் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்திய அரசு இதற்குப் பொறுப்பேற்று பகிரங்க மன்னிப்பு கேட்கவும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தின.

இது இந்தியாவுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசு வெவ்வேறு விளக்கங்கள் அளித்த போதும் பிரச்சனை ஓயவில்லை. பாஜகவில் இருந்து நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டன. இதனால் நுபுர் சர்மாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்தன.
இதனை வலியுறுத்தி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுமையின் போது நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பல இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. டெல்லி, உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் பதற்றத்தை இந்த போராட்டம் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நுபுர் சர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மத குரு கபூர் உத்தரவிட்டது புதிய சர்ச்சையானது. இது தொடர்பாக கபூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே நுபுர் சர்மா விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவர் ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications