விவசாய கடன் தள்ளுபடி குறித்து மோடி உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும்: அய்யாக்கண்ணு திட்டவட்டம்
டெல்லி: விவசாய கடன் தள்ளுபடி குறித்து பிரதமர் மோடி உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு, தமிழகம் திரும்புவோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

24 வது நாட்களை தாண்டியுள்ள போராட்டத்தின்போது, பாம்பு கறி சாப்பிடுவது, எலிக்கறி சாப்பிடுவது என பல்வேறு வகையான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கையை, மோடி போன்ற முகமுடி அணிந்த விவசாயி காலில் ரத்தத்தை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது, அவர்களை கலைந்துசெல்லும்படி போலீசார் எச்சரித்தனர். எனினும், விவசாயிகள் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகக் கூறி, கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர்கள் மீது லேசான தடியடி நடத்திய போலீசார், விவசாயி அய்யாக்கண்ணு உள்ளிட்ட 10 விவசாயிகளை கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் நிபந்தனையுடன் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 10 விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து போராட்டம் நடைபெறும் ஜந்தர்மந்தர் பகுதிக்கு வந்த அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் தங்களை கைது செய்து அழைத்து சென்றபோது தாக்கியதாக குற்றம் சாட்டினார். மேலும், பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் கடன் தள்ளுபடி குறித்து பிரதமர் மோடி உறுதி அளிக்கும் வரை ஜந்தர் மந்தரில் அறவழிப் போராட்டம் தொடரும் எனத் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications