கர்நாடகாவில் தொடரும் காவிரி வன்முறை.. மாண்டியாவில் அரசு பஸ் மீது தாக்குதல்
மாண்டியா: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்பபு தெரிவித்து வரும் போராட்டக்காரர்கள் மாண்டியாவில் கர்நாடகா அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று வலியுறுத்தி மண்டியா, மைசூர், சாமராஜ்பேட்டை, உப்பள்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்கள் பெங்களூர்-மைசூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னட அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி தண்ணீரில் நின்றபடி கோஷம் எழுப்பினார்கள். முன்னாள் எம்.பி. மாதே கவுடா தலைமையில் காவிரி நலன் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி மண்டியா மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
கிருஷ்ணராஜசாகர் அணை மண்டியா மாவட்டத்தில் இருப்பதால் அந்த மாவட்டத்தில் மட்டும் இன்று முழு அடைப்பு நடந்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் பஸ்கள் மண்டியா மாவட்டத்தின் வழியாக செல்வதால் பெங்களூர்-மைசூர் இடையே இன்று பஸ்கள் ஓடவில்லை. அதேபோல் மைசூரில் இருந்து மண்டியா வழியாக ஊட்டி செல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் பலர் இன்று சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வருகிற 9-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது எனவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மாண்டியாவில் கர்நாடகா அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா விதான் சவுதா கட்டிடம் முன்பு அதிரடி படை போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications