இஷ்ரத் என்கவுண்ட்டர்: ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டவரை 'இந்தியர்' என நிரூபிக்க சொன்ன உள்துறை அமைச்சகம்
டெல்லி: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்ட நபரை 'நீங்கள் இந்தியர்தான் என்பதை முதலில் நிரூபியுங்கள்' என பதில் கொடுத்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.
குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு 19 வயது இளம்பெண் இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் 4 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய ஊடுருவியவர்கள் என்றும் அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.

இது போலி என்கவுண்ட்டர்; கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என்ற சர்ச்சை வெடிக்க இது நீதிமன்றத்துக்குப் போனது. குஜராத் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் பி.கே. பிரசாத் தலைமையிலான குழு ஒன்றும் இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் விவகாரத்தை விசாரிக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 1983ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான பிரசாத் மே 31-ந் தேதியுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு ஜூலை 31-ந் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் பிரசாத் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கைகள், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகம், நீங்கள் இந்திய குடிமகன்தான் என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி, பொதுவாக இந்திய குடியுரிமை குறித்து விண்ணப்பதாரர்களிடம் கேட்க வேண்டியதில்லை; அரிதினும் அரிதாக தகவல் தரும் அதிகாரி கேட்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உள்துறை அமைச்சகம் இக்கேள்வியை முன்வைத்திருக்கிறது.
ஆனால், தகவல்களை உரிய நேரத்தில் வழங்க மறுத்து தாமதப்படுத்தவே இந்த கேள்வியை உள்துறை அமைச்சகம் கேட்கிறது; இது அரசின் வெளிப்படைத் தன்மையை தடுக்கிறது என சாடியுள்ளார் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் அஜய் துபே.












Click it and Unblock the Notifications