புனே நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 110 ஆனது!
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
புனேவில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலின் கிராமத்தில் கடந்த 30-ந் தேதி கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 44 வீடுகள் மண்ணில் புதையுண்டன.
வீடுகளில் இருந்த 200-க்கும் அதிகமானவர்கள் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின் விளைவாக சேற்றில் புதைந்த நிலையிலும், இடிபாடுகளில் சிக்கிய நிலையிலும் தொடர்ந்து சடலங்கள் மீட்டெடுக்கப்படுகின்றன.
இன்று 6வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்தது. இதுவரை பெண்கள், குழந்தைகள் என மொத்தம் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 50-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும், அவர்களில் பலர் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை எனவும் அஞ்சப்படுகிறது.
மோசமான வானிலைக்கு இடையிலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.