பொக்லைன் மூலம் மீட்புப் பணி... புனே நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 61 ஆனது
டெல்லி: புனே அருகே பாம்பே கிராமத்தில் நிலச்சரிவொல் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 61ஐத் தொட்டுள்ளது. நிலச்சரிவு நட்ந்து 48 மணி நேரத்திற்கு மேலாவதால், மண்ணில் புதைந்தவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே பாம்பே எனும் கிராமத்தில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 45 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 61 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 150க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 80 வீரர்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப்பணி...
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் புதையுண்டவர்களை மீட்கும் பணி தாமதமாகி வருகிறது. பொக்லைன் மூலம் மீட்புப் பணி நடந்து வருகிறது.

பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்...
சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்கு மேல் ஆவதால், மண்ணில் புதையுண்டவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதப் படுகிறது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது.

பெண்கள், குழந்தைகள்...
காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவின் போது மக்கள் உறக்கத்தில் இருந்ததால் தப்பிக்க இயலவில்லை. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனக் கூறப்படுகிறது.

ஆழ்ந்த இரங்கல்...
கிராமமே மண்ணில் புதையுண்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ராஜ்நாத் சிங், மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications