தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது செருப்பு வீச்சு.. இளைஞர் கைது
தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது இளைஞர் ஒருவர் காலணி வீசியதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. உடனடியாக அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 4-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.

இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைப்பதற்காக அகாலி தளம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று முக்த்சர் மாவட்டம் லாம்பியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது காலணியை கழற்றி முதல்வரை நோக்கி வீசினார். அந்த காலணி முதல்வர் மீது விழுந்தது. இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த முதல்வர் பாதல் அங்கிருந்து வெளியேறினார். அவர் மீது காலணியை வீசிய நபரை உடனடியாக போலீசார் கைது செய்துதனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications