கடன்சுமை... ராகுல்காந்தியிடம் முறையிட்ட பஞ்சாப் விவசாயி தற்கொலை
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தியிடம் பயிர் இழப்பு பற்றி புகார் தெரிவித்த விவசாயி, கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களை பார்த்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி ராகுல் காந்தி பதேகர் சாஹிப் மாவட்டத்துக்கு வந்திருந்தபோது அவரை மிகவும் நெருக்கமாக சந்தித்து தனது துயர நிலையை தெரிவித்த விவசாயிகளில் சுர்ஜித் சிங்(60) என்பவரும் ஒருவராவார்.

பருவம் மாறி மழை பெய்ததால் தனது கோதுமை பயிர்கள் நாசமாகிவிட்டதாகவும், ரூ7.லட்சம் கடனில் மூழ்கியதாகவும் சுர்ஜித் சிங் கண்ணீர் மல்க ராகுலிடம் புகார் தெரிவித்தார். இதற்கு ராகுல் தம்மால் என்ன உதவி செய்ய முடியுமோ? நிவாரணம் பெற்றுத் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில் கடன் சுமையால் சுர்ஜித் சிங் இன்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். பருவமற்ற காலத்தில் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக அதிகமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி வருகின்றது. ஆனால், பஞ்சாப் மாநில விவசாயிகளோ இதுவரை எங்கள் கைக்கு எந்தப் பணமும் வந்து சேரவில்லை என புலம்புகின்றனர். விவசாயிகளின் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது என்பது எதிர்கட்சிகளின் புகாராகும்.












Click it and Unblock the Notifications