சுயமரியாதை இருந்தால் மன்மோகன் ராஜினாமா செய்ய வேண்டும்: அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு
தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ, முட்டாள்தனமான அவசர சட்டம், கிழித்து குப்பையில் போடுங்கள் என்று கடுமையாக சாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.
சுயமரியாதை இருந்தால்..
இந்நிலையில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான அருண் ஜேட்லி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏதேனும் சுயமரியாதை இருந்தால் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரதமர் மன்மோகன்சிங்கின் சுயமரியாதை குறித்து நாடு எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது என்றும் ஜேட்லி கூறியுள்ளார்.
இதேபோல் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி கூறுவது போல் முட்டாள்தனமான அரசின் பிரதமர் மன்மோகன்சிங் பதவியில் தொடரலாமா? அப்பதவியில் இருந்து விலகி தனது தன்மானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார். மேலும், ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு திட்டமிட்ட நாடகம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.