ராதே மாவால் 6 பேர் தற்கொலை செய்து கொண்டார்களா?
மும்பை: சர்ச்சை சாமியார் ராதே மாவால் 6 பேர் தற்கொலை செய்துள்ளதாக ஒரு புதிய தகவல் பரவி வருகிறது.
இந்த ஆறு பேரும் ராதே மா கொடுத்த நெருக்குதலால்தான் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக இந்தத் தகவல் கூறுகிறது.
இதுதொடர்பாக குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார்கள் வந்துள்ளதாகவும், அந்தப் புகார்கள் தற்போது மும்பை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சொத்துக்களைப் பறித்தாரா
இந்த ஆறு பேரிடமிருந்தும் ராதே மா கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களைப் பறித்துக் கொண்டதாகவும். இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஆறு பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
இதுவரை அதிகாரப்பூர்வம் இல்லை
இருப்பினும் இதுகுறித்து காவல்துறையிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. இதற்கிடையே, வரதட்சணை கொடுமை புகாரின் பேரில் விசாரணை நடத்த கண்டிவிலி காவல் நிலையத்திற்கு வருமாறு ராதே மாவுக்குப் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நான் குற்றமற்றவள்
ஆனால் தான் குற்றமற்றவள் என்று ராதே மா கூறி வருகிறார். தன்னைப் பற்றி அவதூறி கிளப்பி வருபவர்கள் அழிந்து போவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
செட்டப் செய்கிறாரா
இதற்கிடையே, ராதே மாவே செட்டப் செய்து பல புகார்களை அவரே ஆள் வைத்துக் கிளப்பி வருவதாக ஒரு செய்தியும் உலா வர ஆரம்பித்துள்ளது. தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் ராதே மாவே இப்படி செட்டப் புகார்களை கிளப்பி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கவர்ச்சிப் படங்கள்
சமீபத்தில் ராதே மாவின் கவர்ச்சிப் படங்கள் சில வெளியாகின. அதில் மினி ஸ்கர்ட் போட்டு ஒரு மார்க்கமாக காணப்படுகிறார் ராதே மா. மேலும் சினிமாப் பாட்டுக்கு டான்ஸும் ஆடுகிறார்.
கட்டிப்புடி வைத்தியம்
மேலும் தனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமான படங்களும் வெளியாகின. ஒரு பக்தர் ராதே மாவை அப்படியே அலேக்காக தூக்கிச் சுற்றி பெருமிதம் அடைகிறார். அந்த வீடியோவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.