“முடிவை” அறிய ... வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய ராகுல்!
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல் இந்தியா திரும்பியுள்ளார். ஒருவேளை காங்கிரஸ் படுதோல்வி அடைந்தால் அதன் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளிப்பார்கள் எனத் தெரிகிறது.
இதற்கு முன் டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தபோது இவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சோனியா அளித்த விருந்தில் பங்கேற்கவில்லை. அதற்கு, ராகுல் காந்தி மூத்த தலைவர்கள் மீதான அதிருப்தியில்தான் விருந்தில் பங்கேற்காமல் வெளிநாடு சென்றுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை அஜய் மக்கான் மறுத்துள்ளார்.
நேற்று அவர் ''ராகுல் கடந்த 3 மாதங்களாக கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால் இரண்டு நாட்கள் வெளிநாடு சென்றிருந்தார். அவர் ஏற்கனவே கடந்த 10 ஆம் தேதி மன்மோகன்சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரது சேவையை பாராட்டி நன்றி கூறினார்'' என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.