தோல்விக்கு எல்லாரும் தான் காரணம்... ராகுலை மட்டும் குறை சொல்லக் கூடாது: திக்விஜய் சிங்
டெல்லி: இத்தேர்தலில் கிடைத்த தோல்விக்கு ராகுலை மட்டுமே குறை சொல்வது சரியல்ல என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
16வது லோக்சபா தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெறவில்லை.
தேர்தல் முடிவுகளை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி, ‘தேர்தல் தோல்விக்கு தாங்களே பொறுப்பேற்றுக் கொள்வதாகத் தெரிவித்தனர். விரைவில் அவர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற கட்சிகளும் தோல்விக்கு ராகுலையே குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக்விஜய் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ‘காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு கட்சியினர் அனைவரும் பொறுப்பாவார்கள். இதில் தனிப்பட்ட முறையில் ராகுல்காந்தியை மட்டுமே குறிப்பிட முடியாது. மேலும் கங்கை நதியை தூய்மை படுத்தும் திட்டத்தை ராஜிவ்காந்தி தான் கொண்டு வந்தார்' என்றார்.
அதேபோல், காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் படுதோல்வியை சந்தித்துள்ளது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறுகையில், ‘தேர்தலில் கிடைத்த படுதோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம். வாக்காளர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது எனக் கூறினார்.