காஷ்மீரில் குழந்தையாக மாறி பனிக்கட்டிகளை மண்டையில் உடைத்த ராகுல்! விடுவாரா பிரியங்கா? ஒரே சேஸிங்தான்
காஷ்மீரில் பனிக்கட்டிகளை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினர்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பனிக்கட்டிகளை தலையில் அடித்து குழந்தைகளை போல் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் விளையாடிய சம்பவம் பெரியவர்களானாலும் அண்ணன்- தங்கை இப்படித்தான் "சண்டையிட்டுக் கொண்டே" இருப்பார்கள் என்பதை காட்டுகிறது.
அண்ணன்- தங்கை, அக்கா- தம்பி ஆகியோர் எப்போதும் எலியும் பூனையுமாகவே இருப்பார்கள். இந்த உவமை எல்லாருக்கும் பொருந்தாது. சிலர் இப்படி சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் வயது ஏற ஏற விடுதியில் தங்கி கல்லூரி படிப்பு, திருமணம், வெளிநாட்டில் வேலை உள்ளிட்ட பிரிவுகள் வரும் போதுதான் அந்த உடன்பிறப்பின் அருமை தெரியும்.
ஆயிரம்தான் சண்டையிட்டு கொண்டாலும் இன்று நம் கண் முன் இல்லாமல் வேறு இடத்தில் இருக்கிறார்களே என மனம் வருந்தும். அவர்கள் விடுமுறையிலோ அல்லது ஏதேனும் வீட்டு விழாவுக்கோ வந்துவிட்டால் போதும் இருவரும் பாசத்தை பொழிந்து கொள்வார்கள்.
இந்திய அரசியலை புரட்டி போடும் பாரத் ஜோடோ யாத்திரை? ராகுல் சாதித்தது என்ன! காங். எதிர்காலம் மாறுமா
விளையாட்டு
இதெல்லாம் விளையாட்டுக்கான சண்டைகளாகவே இருக்கும். ஆனால் இதில் பாசம் மறைந்திருக்கும். இது போன்று அண்ணன்- தங்கை பாசத்திற்கும் சீண்டி விளையாடுவதற்கும் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த செப்டம்பரில் தொடங்கிய ஜோடோ யாத்திரை இன்றுடன் காஷ்மீரில் முடிந்தது.
150 நாட்கள் 4000 கிமீ
150 நாட்கள், 4000 கிலோ மீட்டர் என்பது சாதாரண விஷயம் அல்ல. முட்டி வலியிலும் ராகுல் காந்தி சமாளித்து யாத்திரையை சிறப்பாக நடத்தி முடித்தார். இதனால் கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். அண்ணனின் ஜோடோ யாத்திரை நிறைவு விழாவில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். அப்போதுதான் ராகுல் காந்தி பிரியங்காவை சீண்டினார்.
பிரியங்கா
பிரியங்கா யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். தற்போது காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இரு கைகளிலும் பெரிய பனிக்கட்டிகளை எடுத்துக் கொண்டு கைகளை பின்னால் கட்டிய வாறே தங்கையின் அருகில் சென்ற ராகுல் காந்தி அவர் தலையில் ஐஸ்கட்டிகளை கொண்டு ஓங்கி அடித்தார். இதை சற்றும் எதிர்பாராத பிரியங்கா- என்னையா அடிக்கிறே ! இதோ வரேன் இரு என்பதை போல் அவரை துரத்துகிறார்!
துரத்தி பிடித்த பிரியங்கா
உடனே அவரை பின்னால் இருந்து பிடித்து கொள்கிறார். அப்போது கட்சியினரிடம் பனிக்கட்டிகளை பிரியங்கா கேட்கிறார். உடனே அண்ணன் தலையில் ஓங்கி அடிக்கிறார். அதோடு விட்டாரா!, அண்ணனின் காதில் பனிக்கட்டிகளை வைத்தார். பின்னர் முகத்தில் பனிக்கட்டிகளை தேய்த்தார். இதையடுத்து இருவரும் சண்டையை மறந்து கட்டி அணைத்துக் கொள்கிறார்கள். இந்த வீடியோ காண்போருக்கு தங்கள் அண்ணனையோ தங்கையையோ நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தனது தங்கையை மட்டுமல்ல, ராகுல் உடன் நீல நிறத்தில் ஜெர்கின் அணிந்திருந்தவர் மீதும் பனிக்கட்டிகளை உடைத்து விளையாடினார். இதனால் அங்கு சில நிமிடங்கள் ஆனந்தமும் மகிழ்ச்சியும் கலாட்டாவும் கலகலப்பும் ஏற்பட்டது.
பாரத் ஜோடோ யாத்திரை
ஏற்கெனவே பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசத்திற்கு வந்திருந்த ராகுல் காந்தியை அந்த மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்ற முறையில் பிரியங்கா காந்தி வரவேற்றார். அப்போது பிரியங்கா மீது ராகுல் காந்தி பாசமழையை கொட்டினார், அவரை கட்டி பிடித்து உச்சந்தலையிலும் கன்னத்திலும் முத்தம் கொடுத்தார். இந்த பாசக்கார அண்ணனின் "வெறித்தனமான" பாசத்தால் பிரியங்காவின் கன்னம் சிவந்தது. கண்ணு பட்டுட போகுது.. சுத்தி போடணும்!