ராகுல் காந்திக்கு கூட்டம் வரும்.. ஓட்டு விழாது.. யாத்திரை வேஸ்ட்.. அஸ்ஸாம் கூட்டணி கட்சி தாக்கு!
குவஹாத்தி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்லும் இடங்களில் கூட்டம் அலைமோதும்; ஆனால் ராகுல் காந்திக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ ஓட்டுகள்தான் கிடைக்காது என அஸ்ஸாம் மாநில கூட்டணி கட்சியான ஏ.ஐ.யு.டி.எஃப் (AIUDF) தலைவர் பத்ருதீன் அஜ்மல் விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஏ.ஐ.யு.டி.எஃப் இணைந்திருந்தது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் காலத்தில் "இந்தியா" கூட்டணி கேட்பாரற்று கிடந்தது. இதனால் ஏ.ஐ.யு.டி.எஃப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கடும் கோபத்தை கொட்டியிருந்தார்.

இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ஜனவரி 14-ந் தேதி முதல் தொடங்க உள்ளார். மணிப்பூர் முதல் மும்பை வரை பேருந்து யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அஸ்ஸாமில் ஏ.ஐ.யு.டி.எஃப் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. ஏ.ஐ.யு.டி.எஃப் ஏற்கனவே 3 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை விமர்சித்துள்ளார் ஏ.ஐ.யு.டி.எஃப் தலைவர் பத்ருதீன் அஜ்மல். இது தொடர்பாக பத்ருதீன் அஜ்மல் கூறியதாவது: நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் ராகுல் காந்தி. ஆகையால் ராகுல் காந்தி எங்கே போனாலும் கூட்டம் அலைமோதவே செய்யும். மக்கள் அவரை ஒரு ஹீரோ போலவே பார்க்கின்றனர். ஆனால் ராகுல் காந்திக்காக கூடுகிற அத்தனை கூட்டமும் வாக்குகளாக மாறாது. இந்த கூட்டம் காங்கிரஸுக்கு வாக்குகளாகவும் மாறாது. ஆகையால் பாதயாத்திரை போவதால் எந்த பயனும் கிடைக்கப் போவதும் இல்லை. இவ்வாறு பத்ருதீன் அஜ்மல் கூறினார்.
ராகுல் காந்தியின் யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கி நாகாலாந்து அஸ்ஸாம் வழியாக மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications