கர்நாடக தேர்தல்: என்ன ராகுல் பிரதமராக ஆசைப்படுவதா? எவ்வளவு திமிர்த்தனம்.. மோடி பாய்ச்சல்
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் ஆக ஆசைப்படுவதாக பிரசாரத்தில் பேசியுள்ளார், இது பெரிய திமிர்த்தனம் என்று பிரதமர் மோடி பதில் அளித்து இருக்கிறார்.
பெங்களூர்: ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் ஆக ஆசைப்படுவதாக பிரசாரத்தில் பேசியுள்ளார், இது பெரிய திமிர்த்தனம் என்று பிரதமர் மோடி பதில் அளித்து இருக்கிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முக்கியமான தலைவர்கள் எல்லோரும் இப்போது அந்த மாநிலத்தில்தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முதல்நாள் நடத்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கியமான விஷயம் ஒன்றை கூறினார். அதில் ''2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் கண்டிப்பாக நான் பிரதமர் ஆவேன். தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்பட்சத்தில் பிரதமராக பதவி ஏற்பேன்'' என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த பேச்சிற்கு பெங்கார்பேட் தொகுதியில் பிரச்சாரம் செய்த மோடி பதில் அளித்துள்ளார். அதில் ''ஒருவர் இப்படி வெளிப்படையாக பிரதமர் ஆக விருப்பம் என்று தெரிவிப்பது எவ்வளவு பெரிய திமிர்தனம். கட்சியில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது, ராகுல் பிரதமர் ஆக நினைப்பது பெரிய திமிர்த்தனம்'' என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார். மோடியின் இந்த பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் கோபத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.