“அது அவ்ளோதான்.. முடிஞ்ச்!” பாஜக இந்த முறை 150ஐ தாண்டாது என.. கணித்த ராகுல் காந்தி
பாட்னா: இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக இந்த முறை 150 தொகுதிகளை தாண்டாது என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் பீகாரின் பாகல்பூரில் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமர்சித்தும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்தும் பேசியிருந்தார். அவர் பேசியதாவது, "பாஜக அரசும், பிரதமர் மோடியும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்துள்ளனர். நமது இளைஞர்களுக்கு வேலையில்லாததால் ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் வரை அவர்கள் இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் நேரத்தை வீணடிக்கின்றனர்.
பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி போன்றவற்றால், வேலை கொடுப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலையை முற்றிலுமாக மாற்றுவோம். பட்டதாரி மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய வேலை வாய்ப்புக்கான பயிற்சியை வழங்குவோம். உதவி தொகையாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவோம். வேலையின்மை பிரச்னையை சரி செய்வதே எங்களின் முதல் பணி.
ஒவ்வொரு ஏழை பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் அதாவது மாதம் ரூ.8,500ஐ வழங்குவோம். பெரும் பணக்காரர்களுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த வரியை ஏழைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம்.
இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கான இடத்தை பெற்றுவிடுவோம் என பாஜக நம்பிக்கை தெரிவித்து வருகிறது. ஆனால், நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். பாஜகவினர் 150 இடங்களுக்கு மேல் பெற மாட்டார்கள்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், அக்னிபாத் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும். இந்தியாவுக்கு இரண்டு வகையான தியாகிகள் தேவையில்லை. உட்சபட்ச தியாகம் கோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்குவோம்.
வேளாண் துறை குறித்து இரண்டு வாக்குறுதிகள் முக்கியமானவை. ஒன்று நாங்கள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம். இரண்டாவது அவர்களின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications