ஊழல், ஜிஎஸ்டி, விவசாயிகள் பிரச்சனை.. விவாதிக்க ரெடியா? மோடிக்கு ராகுல் சவால்
போபால்: ஒரு நாளைக்கு 3 மணிநேரம் மட்டுமே தூங்குகிற பிரதமர் மோடி ஊழல், ஜிஎஸ்டி மற்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்டங்கள் அக்னி வெயிலை விட உக்கிரமானவையாக இருக்கிறது. ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை மிக காட்டமாக முன்வைக்கின்றன.
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்.டி.டி.வி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் ராகுல் கூறியிருப்பதாவது:
மத்தியில் அடுத்து யார் ஆட்சி? தீர்மானிக்கப்போவது டெல்லியிலுள்ள 7 தொகுதிகள்தான்.. நம்ப முடிகிறதா?
மோடிக்கு சவால்
ஒரு நாளைக்கு 3 மணிநேரம்தான் பிரதமர் உறங்குகிறார் என்கிறார்கள். நாட்டில் நிலவும் ஊழல், ஜிஎஸ்டி விவகாரம், பணமதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்து என்னுடன் விவாதிக்க மோடி தயாரா?
தத்துவ யுத்தம்
நான் பிரதமர் மோடியை மிகவும் மரியாதையுடனேயே சந்திக்கிறேன். ஆனால் என் மீது ஒருவித வெறுப்பை வெளிப்படுத்துகிறார் மோடி. இந்த தேசத்தின் முற்போக்கு சக்திகளுக்கும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கும் இடையேயான யுத்தமே தற்போது நடைபெறுகிறது.
மக்கள் அஞ்சுகின்றனர்
தேசத்தின் அரசியல் சாசனத்துக்கு தத்துவார்த்தங்களின் பெயரால் அச்சுறுத்தல் உருவாகி உள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை மீறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடியே அறிவிக்கிறார். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சக்தி இந்த நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறது.
பொய்யை பரப்பும் மோடி
நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் குறித்து தொடர்ந்து மோடி விமர்சித்து வருகிறார். எனக்கு உண்மைகள் என்ன என்பது தெரியும். என்னுடைய பாட்டி இந்திராவின் நேர்மையை பற்றி எனக்கு தெரியும். அத்தனையும் பொய்களைத்தான் பிரதமர் மோடி பரப்புகிறார்.
மோடியால் வெல்ல முடியாது
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது என்றனர். ஆனால் நாங்கள் சோர்ந்துவிடவில்லையே.. நாடாளுமன்றத்தில் போராடினோம். களத்தில் போராடினோம். இப்போது மோடிக்கு அச்சம் வந்துவிட்டது. யாருமே பிரதமர் மோடியால் வெல்ல் முடியும் என்று சொல்வதே இல்லை.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.