ராகுல் காந்தி தேசதுரோகி.. அவரை சுட்டுக் கொல்ல வேண்டும்.. பாஜக எம்.எல்.ஏ "ஷாக்" பேச்சு
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாட்டுக்குத் துரோகம் இழைத்து விட்டார். அவர் ஒரு தேச துரோகி. அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கில் தொங்க விட வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கைலாஷ் செளத்ரி என்பவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.எல்.ஏவின் இந்தக் கொலை வெறிப் பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம், பேடூ என்ற தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்த கைலாஷ்.

அங்கு நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு இவர் பேசுகையில் இப்படிக் கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைத் தூண்டி விட்டு, காவல்துறைக்கு எதிராக செயல்படுமாறு கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை முழங்கியவர்களையும், அப்சல் குருவைத் தியாகி என்று கூறியோரையும் எப்போது அவர் ஆதரித்தாரோ, அப்போதே அவர் இந்தியாவில் வசிக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார் என்றார் அவர்.
பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கைலாஷ் அளித்த பேட்டியின்போது தான் கூறியதை மீண்டும் வலியுறுத்திப் பேசினார். இந்தியாவுக்கு எதிராக யார் பேசினாலும், செயல்பட்டாலும் அவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல வேண்டும். இதை நான் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். அது ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி என்றார் கைலாஷ்.
கைலாஷ் செளத்ரியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications