அப்படியே திருப்பி போட்டு பொடியை தூவி.. தெலுங்கானாவில் ‘மொறு மொறு’ தோசை சுட்டு அசத்திய ராகுல் காந்தி!
ஜக்தியால்: தெலுங்கானாவில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, சாலையோர கடை ஒன்றிற்கு சென்று மொறு மொறுவென தோசை சுட்டு அசத்தினார்.
தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ஆம் திகதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, தெலுங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி கடந்த 3 நாட்களாக சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தவகையில், கரீம்நகரில் இருந்து ஜக்தியால் மாவட்டத்துக்கு ராகுல் காந்தி சென்றார். செல்லும் வழியில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறங்கி அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்தார்.

அப்போது, அங்கிருந்த சாலையோர உணவகம் ஒன்றிற்குச் சென்றார் ராகுல் காந்தி. அங்கிருந்த கடை உரிமையாளரிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி, அங்கிருந்த தோசை மாஸ்டரிடம் பேசினார். பின்பு, ஒரு கப்பில் தோசை மாவை எடுத்து அதை கல்லில் ஊற்றி தோசை சுட ஆரம்பித்தார். மேலும், அதன் மீது எண்ணெய் ஊற்றி, மசாலா பொடியை தூவி, தோசையைத் திருப்பிப் போட்டு எடுத்தார். ராகுல் தோசை சுட்டதை அங்கிருந்தவர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து, ஜக்டியாலில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மஞ்சள் விவசாயிகளுக்கு ஆதரவு விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,000-த்தில் இருந்து ரூ.15,000 வரை கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் எல்லாப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட ரூ.500 கூடுதலாக வழங்கப்படுவதை காங்கிரஸ் அரசு உறுதி செய்யும் என்றார்.

மேலும் பேசிய ராகுல், தெலுங்கானாவில் ஜனநாயக ஆட்சி நடப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த மாநிலம் உருவானதில் இருந்து ஒரு குடும்பம் மட்டுமே மாநிலத்தை ஆண்டு வருகிறது. என் எம்.பி பதவியை பாஜகவினர் பறித்தனர். அப்போது எனக்கு வழங்கப்பட்ட அரசு வீட்டையும் பறித்துக் கொண்டனர். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னைப் பொருத்த வரையில் எனக்கு வீடு தேவையில்லை. இந்தியாவே என் வீடுதான்." எனப் பேசினார்.
ராகுல் காந்தி தோசை சுடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கட்சியை பலப்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை செய்து வருகிறார். அந்தவகையில், சாமானிய மக்களோடு நெருங்கும் வகையில் ராகுல் காந்தியின் முயற்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications