சரி, விவாதத்திற்கு அனுமதி கிடைத்து விட்டது.. ஆனால் ராகுல் காந்தி பேசுவாரா?
டெல்லி: மதக் கலவரங்கள் தொடர்பான விவாதம் தொடர்பாக நேற்று லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியினரும், அவர்களின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில் அதற்கான அனுமதியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கொடுத்துள்ளார். நாளை விவாதம் நடைபெறவுள்ளது. ஆனால் ராகுல் காந்தி அதில் கலந்து கொண்டு பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
சமீபத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த மத வன்முறைகள் தொடர்பாக நாளை லோக்சபாவில் விவாதம் நடைபெறும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றியாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
ஆனால் இதை ராகுல் காந்தி எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார், அவர் முதலில் பேசுவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

லோக்சபாவில் அமளி
இந்த விவகாரம் தொடர்பாக உடனடி விவாதம் வேண்டும் என்று கேட்டு நேற்று லோக்சபாவில் பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டது காங்கிரஸ். ராகுல் காந்தியோ சபாநாயகர் இருக்கை முன்பு விரைந்து சென்று கோபமாகவும் பேசினார்.

சபாநாயகர் மீது குற்றச்சாட்டு
சபாநாயகர் பாரபட்சமாக நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எங்களை பேச அனுமதிப்பதில்லை. ஒருவர் மட்டுமே பேச வேண்டும், மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது என்றும் ஜாடையாக மோடியையும் தாக்கினார். இதனால் பெரும் சலசலப்பும் ஏற்பட்டது.

நாளை விவாதம்.. பேசுவாரா ராகுல்
இந்த நிலையில் தற்போது நாளை விவாதம் நடைபெறவுள்ளது. இதில் ராகுல் காந்தி பங்கேற்று என்ன பேசுவார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. 3 முறை எம்.பியான ராகுல் காந்தி, கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அடுத்த நிலையில் இருப்பவர். இவர் பெரும்பாலும் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்றதில்லை. அமைதியாக கூட்டங்களுக்கு வருவதோடு சரி. இதுவரை பெரிய அளவில் இவர் பேசியதாகவும் வரலாறு இல்லை.

அதிரடியாக பேச வேண்டும்
இந்த நிலையில் நாளை நடைபெறப் போகும் இந்த முக்கியமான விவாதத்தில் ராகுல் காந்தி என்ன பேசுவார், எப்படிப் பேசுவார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. அதேசமயம், தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆணித்தரமாக, புள்ளி விவரங்களுடன்,அரசுத் தரப்பை மடக்கும் வகையில் ராகுல் காந்தி அதிரடியாக பேசினால் அது நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸார் மத்தியில் உள்ளது.

600 கலவரங்கள்
சமீப காலத்தில் அதாவது கடந்த மே முதல் ஜூலை வரையிலான காலத்தில் மட்டும் நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான மத வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விவரத் தகவல்கள் கூறுகின்றன. இதில் உ.பியில்தான் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது.

இடைத் தேர்தல் பரபரப்பு
உ.பியில் 12 சட்டசபைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைக் குறி வைத்துத்தான் தற்போது லோக்சபாவிலும், ராஜ்யசபாலவிலும் கட்சிகள் கட்டி ஏறிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications