"எங்க எம்.பி ராகுலைக் காணோம்; கண்டிபிடிச்சு தந்தா பரிசு நிச்சயம்" – போஸ்டர் ஒட்டிய அமேதி "மக்கள்"
அமேதி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியைக் காணவில்லை என்று அமேதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக உள்ள ராகுல் காந்தி கட்சிப்பணிகளில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டுள்ளார். அமேதி தொகுதி எம்.பியாக உள்ள அவர், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் பங்கேற்கவில்லை.
அவர் எங்கு உள்ளார் என யாருக்கும் தெரியாத நிலையில், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமேதி தொகுதி மக்கள் ராகுல் காந்தியை காணவில்லை. ராகுலை கண்டுபிடித்து தந்தால் பரிசு என்ற போஸ்டரை தொகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர்.
அமேதி மட்டுமல்லாது மாநிலத்தின் பல பகுதிகளிலும் இப்போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் "தலைவர் இல்லாத அமேதி" என்ற தலைப்பு காணப்படுகிறது. மேலும் இந்தி திரைப்பட பாடல் ஒன்றும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
"ஜானே வோஹ் கான்சா தேஷ், ஜஹான் தும் சலே கயே" என்ற அந்த பாடலுக்கு அர்த்தம் "நீங்கள் எங்கு சென்றிருக்கிறீர்கள் என்று யாருக்கு தெரியும்" என்பதாகும். அப்போஸ்டரில் அமேதியில் சாலைகள் மோசமாக உள்ளதாகவும், மட்டமான சுகாதார சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு அமேதி மக்கள் என்று அந்த போஸ்டரில் இறுதியாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.