மத்தியில் “இந்தியா” கூட்டணி ஆட்சியில் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கம்: ராகுல் காந்தி திட்டவட்டம்
ராஞ்சி: மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; இடஒதுக்கீட்டுக்கான தற்போதைய 50% உச்சவரம்பு நீக்கப்படும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரையை நடத்தி வருகிறார் ராகுல் காந்தி. கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய முதல்வர் சாம்பாய் சோரன் அரசு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற நிலையில் ராகுல் காந்தி யாத்திரை நடைபெற்றது.

ராகுல் காந்தி தமது யாத்திரை பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: நாட்டின் ஆதி பழங்குடிகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கொத்தடிமைகளாக இருக்கின்றனர். நாட்டின் உயர்நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளில் தலித்துகளும் பழங்குடிகளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பணியாற்ற வேண்டும்.
லோக்சபா தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். தற்போது தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50%-க்கும் மேல் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்கிற உச்சவரம்பு உள்ளது. "இந்தியா" கூட்டணி ஆட்சியில் இந்த உச்சவரம்பை நீக்குவோம். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் அனைத்து ஜாதியினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை இந்தியா கூட்டணி ஆட்சி வழங்கும் என உறுதி தருகிறேன்.
பிரதமர் மோடி எப்போதுமே தம்மை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பார். ஆனால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைத்தால் இந்தியாவில் ஏழை, பணக்காரன் என இரு ஜாதிதான் இருக்கிறது என்பார். தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிமைகளை கேட்டால் இந்தியாவில் ஜாதிகளே இல்லை என்பார். ஆனால் ஓட்டு கேட்க வரும் போது தம்மை இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பார்.. இதுதான் மோடி.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஒருங்கிணைந்து நின்று அரசை பாதுகாத்து இருக்கின்றன. அதிகார பலம், பண பலம் மூலம் மாநில அரசுகளை கைப்பற்றுவதை பாஜக வழக்கமாக வைத்திருக்கிறது. ஜனநாயகத்தின் மீது பாஜக, ஆர்.எஸ்.எஸ். தாக்குதல் நடத்துகிறது.
மோடியின் 'ஊடக நண்பர்கள்' நாட்டைப் பற்றிய உண்மையை ஒருபோதும் சொல்லமாட்டார்கள், இப்போது நாட்டுக்கு உண்மையைச் சொல்ல சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியிருக்கிறது. நேற்று தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நேரடியாக பேசினார்கள், அவர் மூலமாக ஏழைத் தொழிலாளர்களின் கஷ்டங்களை நீங்கள் கேட்டறிந்து அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணியமர்த்தும் போக்கை மோடி அரசு ஊக்குவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு வரை 28% தொழிற்சாலைகளில் மட்டுமே ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர், 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 98% ஆக அதிகரித்துள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவதால் ஒவ்வொரு தொழிலாளியும் நலிவடைந்து வருகின்றனர். ஊதியம் பெறும் தொழிலாளர்களில் கூட, வழக்கமான நேரத்தை விட பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை, எனவே இன்று ஒவ்வொரு தொழிலாளியும் தனது மற்றும் தனது குடும்பத்தின் எதிர்காலத்தை இருண்டதாக பார்க்கிறார்கள்.
இந்தியாவைக் கட்டமைக்கும் இந்தத் தொழிலாளர்களை வலுப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது ஆனால் பாஜக அவர்களை ஒரு சில சக்தி வாய்ந்தவர்களின் அடிமைகளாக ஆக்க விரும்புகிறது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் இந்த தொழிலாளர்களின் குரலாக மாறுவதற்கும் அவர்களின் உரிமைகளையும் நீதியையும் பெறுவதற்கான ஒரு ஊடகமாகும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications