ராகுல் காந்தியை பிடித்து கீழே தரையில் தள்ளி உ.பி. போலீஸ் உச்சகட்ட அராஜகம்-காங். தொண்டர்கள் மறியல்!
நொய்டா: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பிடித்து தரையில் கீழே தள்ளிவிட்டு உ.பி. போலீசார் உச்சகட்ட அராஜகத்தை அரங்கேற்றியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
Recommended Video
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் போலீசார் எரித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ராகுல் தடுத்து நிறுத்தம்
இதனைத் தொடர்ந்து ஹத்ராஸில் தலித் பெண் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் காரில் சென்றனர். அவர்கள் சென்ற கார் டெல்லி-நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது.

ராகுலை தள்ளிவிட்ட போலீஸ்
ஆனால் போலீசாரின் தடையை மீறி ராகுல் காந்தி சாலையில் நடந்து சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். போலீசார் தடையை மீற முயன்றபோது, ஒருகட்டத்தில் ராகுல் காந்தியை போலீசார் இழுத்து பிடித்து கீழே தள்ளிவிட்டனர். இதில் நிலைதடுமாறி மண்சாலையில் ராகுல் காந்தி விழுந்தார்.

காயங்களை கண்டு பதறிய பிரியங்கா
பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் உதவியுடன் ராகுல் காந்தி தரையில் இருந்து தூக்கப்பட்டார். அவரது காயங்களை கண்டு பிரியங்கா காந்தி பதறினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ராகுலுடன் வந்த காங்கிரஸ் தொண்டர்கள் உச்சகட்ட கொந்தளிப்பில் உள்ளனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராகுலை கீழே தள்ளிவிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
|
காங்கிரசார் மறியல்
இதனிடையே ராகுல் காந்தி தடையை மீறியதால் கைது செய்யப்பட்டார். ஆனால் ராகுல் காந்தியை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தை காங்கிரஸ் தொண்டர்கள் மறித்தனர். ராகுல் காந்தி செல்லும் போலீஸ் வாகனத்தை முன்னோக்கிச் செல்லவிடாமல் மறியலில் ஈடுபட்டனர் காங்கிரஸ் கட்சியினர்.












Click it and Unblock the Notifications