ஐத்திங்.. காப்பீடு சட்ட திருத்த மசோதாவில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடவில்லை: சொல்வது ராகுல் காந்தி
டெல்லி: காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு சதவீத அதிகரிப்பு தொடர்பான சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடவில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.
இந்திய காப்பீட்டுத்துறையில், தற்போதுள்ள அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்க பிரதமர் மோடியின் அமைச்சரவை முடிவு செய்தது. ஆனால் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக பாராளுமன்ற விவகார அமைச்சர் வெங்கையா நாயுடு டெல்லியில் கூட்டிய அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த காப்பீட்டு சட்ட திருத்த மசோதா 2008ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டதுதான்.

அதைத்தான் இப்போது நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம். ஆனால் இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று பா.ஜனதா கண்டனம் தெரிவித்து இருந்தது. இது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் கேட்டபோது, நாங்கள் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் பிரச்சினையில் இரட்டை வேடம் போடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். ஐத்திங்.. காங்கிரஸ் இரட்டைவேடம் போடவில்லை என்று கருதுகிறேன் என்று நாடாளுமன்ற வளாகத்தில் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
டெல்லி மேல்-சபை காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத் கூறும்போது, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். இது எங்களது குழந்தைதான். ஆனால் இதை 2008ல் பா.ஜனதா எதிர்த்தது. எனினும் இந்த மசோதாவில் சில பயனுள்ள திருத்தங்களை செய்யவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.
பாராளுமன்ற தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பிய பின்பு இந்த மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரின்போது நிறைவேற்றலாம். என்றார்.












Click it and Unblock the Notifications