நடுவுல கொஞ்சம் காணாமல் போன ராகுல்.. திரும்பி வந்தும் மர்மம் விலகலை!
எங்கே போனார்? எப்படி இருக்கிறார்... எப்போது வருவார் என்று போஸ்டர் ஓட்டி தேடப்பட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒருவழியாக இன்று இந்தியா திரும்பினார். இன்று காலை 11.15 மணியளவில் தாய் ஏர்வேஸ் மூலம் பாங்காங்கிலிருந்து அவர் டெல்லி வந்து சேர்ந்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், விடுமுறை எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி இந்தியாவில் இருந்து புறப்பட்டார். கட்சிப் பணிகளில் இருந்து சிறிது நாள் ராகுல் விலகியிருப்பார் என்று மட்டுமே தெரிவித்த காங்கிரஸ் மேலிடம் அவர் எங்கு சென்றார், எதற்காக சென்றார், எப்போது திரும்புவார் என்ற தகவலை ரகசியமாகவே வைத்திருந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை
இதனால், ராகுல் காந்தியைக் காணவில்லை, ராகுல் எங்கே என்றெல்லாம் உள்ளூர் போஸ்டர் முதல் உலக அளவில் சமூக வலைத்தளங்கள் வரை பரபரப்பு பட்டையை கிளப்பியது.

வர வேண்டிய நேரத்தில் வருவார்
ராகுல் எங்கிருக்கிறார், எப்போது வருவார் என எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்ட போதும், ராகுலின் அங்க அடையாளங்கள் குறித்து டெல்லி போலீஸ் விசாரித்த போதும் காங்கிரஸ் தரப்பில் முறையான பதில் தரப்படவில்லை. பின்னர் அவர் எங்கிருக்கிறார் என தங்களுக்கே தெரியாது எனவும், வர வேண்டிய சமயத்தில் ராகுல் வருவார் எனவும் கூறி காங்கிரஸ் தலைவர்கள் பலர் மழுப்பினர்.
இந்நிலையில், அவர் பாங்காங்கில் இருந்து வந்த விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். முன்னதாக, காலை 10.45 மணிக்கு விமானம் வருவதாக இருந்தது. ஆனால், 40 நிமிடங்கள் விமானம் தாமதமாக வந்தடைந்தது. இது ஒருபுறம் இருக்க, ஏப்ரல் 15ம் தேதி நள்ளிரவே ராகுல் டெல்லி திரும்பி விட்டார் என ஒருபுறம் தகவல் வந்தது. மற்றொரு புறம், விமானம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணம் என்றும் இப்போது வருவார். பிறகு வருவார் என்றும் செய்திகள் வந்தது குழப்பத்தை அதிகப்படுத்தி உள்ளது.

எங்கே போனார்?
கடந்த 55 நாட்களாக லீவ்வில் இருந்த ராகுல் அப்படி எங்கு தான் இருந்தார் என்ற கேள்விக்கு பல தரப்பட்ட பதில்கள் கூறப்படுகிறது. அவர் தெற்காசிய நாடுகளில் தங்கி இருந்தார் என்று ஒரு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

தியானப்பயிற்சி
ரங்கூன், மியான்மர் ஆகிய நாடுகளில் ராகுல் தியான பயிற்சி எடுத்து வந்தார் என மற்றொரு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக அவர் சிம்லாவில் ஓய்வெடுத்து வருவதாக வாட்ஸ்அப் மற்றும் டுவிட்டரில் புகைப்படத்துடன் செய்திகள் உலா வந்தன.

ரகசிய ஆலோசனை
டெல்லி திரும்பிய ராகுலை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்த தாயார் சோனியாவும், சகோதரி பிரியங்காவும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேரணியில் பங்கேற்பு
ராகுலுக்கு கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுமா என கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர்களையும், விவசாயிகளையும் ராகுல் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி நில மசோதாவை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கும் ராகுல் தலைமை ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழப்பம் தீரலையே
எப்படியோ ஒருவழியாக ராகுலின் ஓய்வு முடிந்து விட்டது. இதன்பிறகாவது கட்சியை மீட்டெடுக்கும் பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் ராகுல் நாடு திரும்பி விட்டாலும், கட்சிக்குள்ளும் ராகுலின் திடீர் ஓய்விற்கான காரணத்திலும் உள்ள குழப்பம் அதிகமாகிக் கொண்டே உள்ளது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications