நானெல்லாம் பெருமைமிகு இந்தியன்தானப்பா.. மோடியை மடக்கிய ராகுல்காந்தி!
அமேதி: 'நான் பெருமைமிகு இந்தியன்' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். இவ்வாறு கூறியதன் மூலம், பிரதமர் நரேந்திரமோடியை மறைமுகமாக ராகுல்காந்தி தாக்கினார்.
57 நாள் மர்ம பயணத்துக்கு பிறகு முதல் முறையாக, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தனது எம்.பி தொகுதியான அமேதியில் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
நிருபர்களிடம் ராகுல்காந்தி பேசுகையில், மோடி அரசு, விவசாயிகளை தவிக்க விட்டுவிட்டு, தொழிலதிபர்களுக்கு ரத்தின கம்பளம் விரிக்கிறது. எனது தொகுதியில் அமைய இருந்த உணவு பூங்கா திட்டத்தை மோடி அரசு வாபஸ் பெற்றுவிட்டது. இது பழிவாங்கும் அரசியலாகும்.
மேலும், அமேதி தொகுதியில், எந்த ஒரு மத்திய அரசின் பணிகளும் நடைபெறவில்லை. வேண்டுமென்றே அமேதி தொகுதியை மத்திய அரசு புறக்கணிக்கிறது. நான் பெருமைமிகு இந்தியன். மற்ற அனைவருமே இந்தியர்களாக இருக்க பெருமைப்படுபவர்கள்தான். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
சீனா மற்றும் தென்கொரியா நாட்டு பயணத்தின்போது, மோடி பேசுகையில், முன்பெல்லாம் இந்தியர்கள் என்று சொல்ல மக்கள் அசிங்கப்பட்டனர். கடந்த ஓராண்டாக, இந்தியர்கள் என்று சொல்லுவதற்காக மக்கள் பெருமைப்படுகின்றனர் என்று கூறியிருந்தார். இதைத்தான் ராகுல் மறைமுகமாக தாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.