கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்.. “அப்படி என்ன குற்றம் செய்தேன்?” ராகுல் தர்ணா!
கவுஹாத்தி: அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அண்மையில் தொடங்கினார். அவரது யாத்திரை நாகாலாந்து மாநிலத்தைக் கடந்து பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் நுழைந்தது. விஸ்வநாத் சவுராலி, ஓவனா ஆகிய பகுதிகளில் அவர் நடை பயணம் மேற்கொண்டார்.

அசாம் மாநிலத்தின் லக்கிம்பூரில் காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பாஜக தொண்டர்கள் கிழித்ததாகவும், வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அசாமில் ராகுல் யாத்திரைக்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ளும் இடங்களில் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் அங்கு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"கோயிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்" என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். "என்னை கோவிலுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. நான் கோவிலுக்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. மேலே இருந்து உத்தரவு வந்துள்ளது என்பது தெளிவாகிறது." என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அயோத்தியில் ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டை நிகழ்வு இன்று நடப்பதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதுதவிர ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் வளாகத்திற்கு வெளியே பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பிறகுதான் அனுமதி என அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications