அதிர்ஷ்டமற்றவர், கெட்ட சகுனம்! இந்தியா தோல்விக்கு மோடிதான் காரணம்.. சூசகமாக விமர்சித்த ராகுல்காந்தி
ஜெய்ப்பூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியுற்றதற்கு அதிர்ஷ்டமற்றவர்தான் காரணம் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது கிடையாது என்பது வரலாறு.

எனவே காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. காங்கிரஸை பொறுத்த அளவில் முதல்வர் அசோக் கெலாட், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் என இருவருக்கும் இடையே உள்ள சலசலப்புகள் கட்சிக்கான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தீவிரமான பிரசாரத்தின் மூலமாக இதை சரிசெய்து, நிலைமையை மாற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற கட்சி திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜாலோரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியுற்றதற்கு பிரதரமர் மோடிதான் காரணம் என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியை காண பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், 8க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், அமித்ஷா, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதிமாக இந்திய அணி தோல்வியை தழுவியது.
இதனை குறிப்பிட்டு பேசிய ராகுல்காந்தி பிரதமர் மோடியால்தான் இந்திய அணி தோல்வியடைந்ததாக குற்றம்சாட்டினார். ஜாலோர் பொதுக்கூட்டத்தில், 'பனௌடி' (அதிர்ஷ்டமற்றவர்/கெட்ட சகுனம்) என சிலர் இந்தியில் கூச்சலிட்டனர். இதை சிரித்துக்கொண்டே கவனித்த ராகுல், "நமது வீரர்கள் சிறப்பாக விளையாடினர். நாம்தான் வென்றிருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டமற்றவரால் நாம் தோற்கடிக்கப்பட்டோம்" என்று மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தி தனது உரையில் மோடி பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், பாஜக இவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "நாட்டின் பிரதமர் குறித்து எப்படி இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த முடிகிறது? நம் பிரதமர், வீரர்களை சந்தித்து உற்சாகப்படுத்தினார். வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி. இதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications