காங்கிரஸை காப்பாற்றனும்னா ராகுல் அரசியலைவிட்டு ஓடனும்... சு.சுவாமி 'பொளேர்'
டெல்லி: காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரசியலைவிட்டே விலகிவிடுவதுதான் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி மும்பையில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மகாத்மா காந்தியை கொன்று விட்டனர் என்று கூறினார்.

ஆனால் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பான அவதூறு வழக்கு விசாரணையில், மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்." என நான் கூறவில்லை என்று ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராகுல் தன் நிலையில் இருந்து பல்டி அடித்துவிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம், ராகுல் தன் நிலையில் இருந்து பின்வாங்கியதால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் ராகுல் அதை ஏற்கவில்லை. தனது நிலையில் உறுதியாக இருப்பதாக ட்விட்டரில் கருத்தை வெளியிட்டார்.
இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சு.சுவாமி அளித்த பேட்டியில், ராகுல்காந்தி தம்முடைய நிலைப்பாட்டில் உறுதி இல்லாதவர். அவர் ஒரு பெரிய கோழை. 2 முறை அவர் பல்டி அடித்துள்ளார்.
அவருக்கு இந்திய அரசியலில் எதிர்காலம் இல்லை என்பது எனது கருத்தாகும். காங்கிரஸ் கட்சி காப்பாற்றப்பட வேண்டுமானால் ராகுல் அரசியலை விட்டே விலக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications