விரைவில் காங்கிரஸ் தலைவராவார் ராகுல்... சோனியா காந்தி தகவல்
ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என சோனியா காந்தி தெரிவித்தார்.
Recommended Video
டெல்லி: ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என அப்பொறுப்பில் தற்போது உள்ள சோனியா காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை சோனியாகாந்தி கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் வகித்து வருகிறார்.அதன் பின்னர் மூத்த தலைவர்களின் கோரிக்கையை ஏற்று அக்கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
அண்மையில் சோனியா காந்திக்கு உடல்நல குறைவால் அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியை மேம்படுத்த ராகுல் காந்தி நாடு முழுவதும் தனது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக அதன் தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் பகிரங்கமாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.மேலும் அண்மையில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த ராகுல், காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தயாராகிவிட்டேன் என்றார்.
ராகுலை ஆதரித்து தீர்மானம்
தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவிலும் ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட்டும் தீபாவளிக்கு பிறகு ராகுல் அப்பதவியை ஏற்பார் என்றார்.
புத்தக வெளியீட்டு விழா
டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் சுயசரிதை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சோனியா காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவரிடம் ஆங்கில தொலைகாட்சி சேனல் ஒன்று காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து கேள்வி எழுப்பியது.
ராகுல் தலைவர் பதவியை ஏற்பார்
சோனியா கூறுகையில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி விரைவில் பொறுப்பேற்பார். அனைவரும் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது தற்போது நடக்கவுள்ளது என்றும் கூறினார். வரும் 25-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தப்பட்டு ராகுல் விரைவில் தலைவர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.