சார், பாப்பாவுக்கு சூடா பாலைக் கொடுங்க.. அடுத்து வர்றது திண்டிவனம்.. ரயில்வேயின் புதிய வசதிகள்!
டெல்லி: குழந்தைகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் சூடான பால், குழந்தைகளுக்கான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2016-17ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து இதுகுறித்து சுரேஷ் பிரபு தெரிவித்ததாவது: பச்சிளம் குழந்தைகளுடன் பயணிப்போர் வசதிக்காக, ரயில் நிலையங்களில் சூடான பால், குழந்தைகளுக்கான சிறப்பு உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ரயில்வே சாப்பாடு மெனுவிலும் குழந்தைகளுக்கான உணவுகள் இடம்பெறும்.

மேலும், சிறுநீர், மலம் கழிக்கும் குழந்தைகளை பராமரிக்க வசதியாக ரயில் பெட்டிகளுக்குள் 'பேபி போர்ட்டு' வசதி செய்து தரப்படும். அதில், டயாப்பர், குழந்தைகள் ஆடைகளை வைத்துக்கொள்ள முடியும்.
ரயில் அடுத்ததாக எந்த ரயில் நிலையம் செல்லும், தற்போது எந்த ரயில் நிலையத்தில் நிற்கிறது என்பது போன்ற தகவல்களை, ரயில் பெட்டியின் உள்ளே திரை அமைத்து காண்பிக்க வசதி செய்யப்படும்.
ஒரு விபத்து நடந்தாலும், ஒரு உயிர் பறிபோனாலும், அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே, பாதுகாப்பான பயணத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்போம். இவ்வாறு சுரேஷ் பிரபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications