பெங்களூரில் மாலையில் வெளுத்த மழை.. திருச்சி, சேலத்தையும் குளிப்பாட்டியது
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்த மக்கள் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
குமரி அருகே கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து இப்போது அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நேற்று தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பெய்து வியப்பில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டல தாக்கத்தால், கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரளவுக்கு மழை பெய்திருந்தது. இன்று சேலத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. திருச்சியில் பகல் நேரத்தில் நல்ல மழை கொட்டியது.
இந்த நிலையில் மாலையில் பெங்களூரில் மழை வெளுத்து வாங்கியது. 5.30 மணி முதலே வானம் இருட்டியபடி காட்சியளித்தது. இதன்பிறகு இடியுடன் மழை கொட்டியது.
எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மனஹள்ளி, பேகூர் ரோடு, மடிவாளா, ஜெயநகர், கோரமங்களா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது, 6 மணிக்கே இரவு போன்ற இருள் சூழ்ந்திருந்தது.
பெங்களூரில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், இந்த மழை மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. நாளையும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.