கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.. பீதியை கிளப்பும் வானிலை மையம்!
கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கொட்டி வரும் வரலாறு காணாத மழையால் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடுமையான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கேரளாவில் பேரழிவு
கேரளத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருவதால் ஆலப்புழா, பத்தனம்திட்டை, இடுக்கி, எர்ணாக்குளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் 186 பேர் பலி
ஆகஸ்டு 8ஆம் தேதி முதல் மழை, வெள்ளம், மண்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நாள் முதல் இதுவரை 186பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
கடும் இழப்பு
தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா, வேளாண்மை ஆகிய துறைகள் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளன.
மீட்புப்பணிகளில் ராணுவம்
நெல், வாழை ஆகிய பயிர்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலைகள் சேதமடைந்துள்ளன. மீட்புப்பணிகளில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
3 நாட்கள் மழை நீடிக்கும்
இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கேரளாவில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் பீதி
ஏற்கனவே கொட்டி வரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் கேரள மாநிலம் சின்னாபின்னமாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.