'பில்ட் அப்' கொடுத்து மண்ணை கவ்விய ராஜ் தாக்கரே கட்சி
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 219ல் போட்டியிட்டது. இதில் அக்கட்சி ஜுன்னார் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பிற இடங்களில் தோல்வி அடைந்துள்ளது.
முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா மும்பை, நாசிக் உள்ளிட்ட 12 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது அதே மும்பை, நாசிக்கில் கூட வெற்றி பெறவில்லை.
இதை பார்க்கையில் அக்கட்சிக்கு மராத்தியர்கள் கூட வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்ய வேண்டியவை குறித்து தற்போதே எழுதி வைத்துவிட்டதாக ராஜ் தெரிவித்தார்.
மோடி குஜராத்தின் பிரதமராக அல்லாமல் இந்தியாவின் பிரதமராக செயல்பட வேண்டும் என்று ராஜ் தெரிவித்தது எதுவும் மக்கள் காதில் விழவில்லை.