ஹரியானாவை தொடர்ந்து.. ராஜஸ்தானிலும் பாஜக எம்பி கட்சியிலிருந்து விலகல்! காங்கிரசில் இணைவதாக பேச்சு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எம்பியாக இருந்த ராகுல் கஸ்வான், பாஜகவிலிருந்து விலகியுள்ளார். இவர் விரைவில் காங்கிரசில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சித் தாவல்கள் நடக்க தொடங்கியுள்ளன. நேற்று ஹரியானாவின் பாஜக எம்பி பிரிஜேந்திர சிங், அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்திருந்தார். இந்நிலையில், இன்று ராஜஸ்தானில் பாஜக எம்பி ராகுல் கஸ்வான் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். பாஜக சமீபத்தில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. கஸ்வானின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநிலம் சுரு லோக்சபா தொகுதியின் எம்பியாக கஸ்வான் இருந்து வருகிறார். ஆனால், இந்த முறை அவருக்கு பாஜக சீட் வழங்கவில்லை. இது கஸ்வானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் தற்போது எம்பி பதவியை ராஜினாமா செய்து, பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ளார்.
இது குறித்து தனது சோஷியல் மீடியா தளத்தில், "சுரு தொகுதி மக்கள் எனது குடும்பத்தினர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முக்கியமான முடிவை எடுத்திருக்கிறேன். அரசியல் காரணங்களுக்காக இந்த தருணத்திலிருந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், லோக்சபா உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும் நான் விலகிக்கொள்கிறேன்.
இந்த தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா மற்றும் அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். கஸ்வானுக்கு பதிலாக பரா ஒலிம்பிக் வீரர் தேவேந்திர ஜஜாரியாவை சுரு தொகுதியின் வேட்பாளராக பாஜக அறிவித்திருக்கிறது. நேற்று ஹரியானா எம்பி, இன்று ராஜஸ்தான் எம்பி என ஆளும் கட்சியின் எம்பிக்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து வருவது பெறும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
சுரு லோக்சபா தொகுதியை பொறுத்த அளவில், கடந்த 1999ம் ஆண்டிலிருந்து இங்கு பாஜகதான் வெற்றி பெற்று வந்திருக்கிறது. கடந்த தேர்தலில் கஸ்வான் சுமார் 4.5 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். இம்மாநிலத்தில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு பாஜக 24 தொகுதிகளை கைப்பற்றியது. 1 தொகுதியை மட்டும் பாஜகவின் கூட்டணி ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி வென்றிருந்தது. அதேபோல சமீபத்தில் இம்மாநிலத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications