ராஜஸ்தானில் பாஜக இன்று அவசர ஆலோசனை- சச்சின் பைலட் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில பாஜக இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. இதனிடையே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Recommended Video
கர்நாடகா, மத்திய பிரதேசங்களில் ஆளும் கட்சியின் கணிசமான எம்.எல்.ஏக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் ஸ்டைல். இதே பாணியில் ராஜஸ்தானிலும் பாஜகவின் சித்து விளையாட்டு உச்சகட்டமாக அரங்கேறி வருகிறது.

போர்க்குரல் சச்சின் பைலட்
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவை வளைத்தது போல ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை தூக்கியது பாஜக. ஆனால் மத்திய பிரதேசத்தில் கோட்டைவிட்டதைப் போல மந்த கதியில் இல்லை காங்கிரஸ். ராஜஸ்தானில் மிகவும் உஷாராகவே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது காங்.

சச்சின் பைலட் நீக்கம்
தற்போது சச்சின் பைலட்டை துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ். சச்சின் பைலட்டின் 2 ஆதரவு அமைச்சர்களுக்கும் காங்கிரஸ் கல்தா கொடுத்திருக்கிறது. இதனை எதிர்பார்த்த சச்சின் பைலட் இன்று முதல் தமது ஆட்டத்தை வெளிப்படையாக அரங்கேற்ற இருக்கிறார்.

ராஜினாமா ஆட்டம்
முதல் கட்டமாக தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை முதல்வர் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வைத்து ராஜினாமா செய்ய வைக்க இருக்கிறார் சச்சின் பைல்ட். இன்று ராஜஸ்தானில் இந்த நாடகம் அரங்கேற உள்ளது .இதே நிலையில் மாநில பாஜகவும் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளது.

பாஜக இன்று ஆலோசனை
இதில் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்த்து பாஜகவின் புதிய அரசு அமைப்பது தொடர்பான வியூகங்கள், சச்சின் பைலட் கோஷ்டியை பாஜகவில் இணைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தானில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications