ராஜஸ்தான் தேர்தல்.. யாருக்கு அதிக செல்வாக்கு.. பாஜகவா?.. காங்கிரசா? வெளியான புது சர்வே!
ஜெய்பூர்: ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், என்.டி.டிவி நடத்திய சர்வே விவரங்களை காணலாம்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் கடந்த 1993 ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. எனவே வரும் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் வென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையை பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில், கடந்த கால வரலாறுகளை மாற்றி ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசும் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது.
பாஜகவுக்கு வாய்ப்பு?: ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 6 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நெருங்கி வந்து விட்ட நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.
இதனிடையே பிரபல ஆங்கில தொலைகாட்சி நிறுவனமான என்.டி.டிவி நடத்திய கருத்துக்கணிப்புகளை இன்று வெளியிட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்திய கருத்துக்கணிப்புகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு செல்வாக்கு அதிகமா அல்லது பிரதமர் மோடிக்கு செல்வாக்கு அதிகமாக என்று சர்வே நடத்தி அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
மோடியின் செல்வாக்கு: இதன்படி, பிரதமர் மோடியை பிடிக்கும் என 37 சதவிகிதம் பேரும், அசோக் கெலாட்டிற்கு ஆதரவாக 32 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இருவருமே பிடிக்கும் என 20 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கடுமையான எதிர்ப்பு இல்லையென்றாலும் கூட பிரதமர் மோடியின் செல்வாக்கு இன்னும் மங்கவில்லை. பிரதமர் மோடிக்கு இருக்கும் கூடுதல் செல்வாக்கு அங்கு பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உதவும் என்று பாஜகவினரும் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications