ரூ.2 கோடி இன்சூரன்ஸும் வாங்கிக் கொடுத்து.. மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்.. விபத்து போலவே "செட்டிங்"
ஜெய்ப்பூர்: மனைவி பெயரில் ரூ.2 கோடிக்கு இன்சூரன்ஸும் வாங்கிக் கொடுத்து அவரை கொலை செய்த கணவனை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மனைவியின் கொலையை அச்சு அசலாக விபத்து போலவே செட்டிங் செய்து கணவர் ஆடிய நாடகமும் அம்பலம் ஆகியுள்ளது.
அனைத்து பிளான்களையும் சரியாக அரங்கேற்றி வந்த அவர், ஒரே ஒரு விஷயத்தில் சொதப்பியதால் தான் அவரது கொடூர திட்டத்தை போலீஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது.
ஷ்ரத்தாவை போல்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பியூட்டிஷியன் கொடூர கொலை.. காதலனால் ஷாக்கில் பெங்களூர்
விபத்தில் பலியான பெண்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷாலு தேவி (32). இவர் தனது அண்ணனுடன் கடந்த 5-ம் தேதி பக்கத்து ஊரில் உள்ள கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஷாலு தேவியும், அவரது அண்ணனும் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், இதை விபத்தாக கருதி வழக்கை முடித்து வைத்தனர்.
கணவன் மீது சந்தேகம்
இதனிடையே, மனைவியின் உடல் ஒப்படைக்கப்பட்டதும் அதை பார்த்து அவரது கணவர் மகேஷ் சந்திரா கதறி துடித்திருக்கிறார். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் மாயமானார். இதையடுத்து, அவரை அங்கிருந்த போலீஸார் கண்காணித்த போது, அவர் இன்சூரன்ஸ் அலுவலகத்துக்கு சென்றது தெரியவந்தது. மனைவி இறந்த ஒரு மணிநேரத்துக்கு உள்ளாகவே அவர் இன்சூரன்ஸ் அலுவலகத்துக்கு சென்றதால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. இதன் தொடர்ச்சியாக, மகேஷ் சந்திராவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
காட்டிக்கொடுத்த சிசிடிவி
ஆனால், அவரிடம் நடத்திய விசாரணையில் எந்த உண்மையும் வெளியாகவில்லை. மேலும், அவரது செல்போனையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அதிலும் எந்த தகவலும் கண்டறியப்படவில்லை. பின்னர், கடைசியாக மகேஷ் சந்திரா வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்த போதுதான், அவர் மீதான சந்தேகம் உறுதியானது. அந்த சிசிடிவி காட்சியில், அவரது மனைவி ஷாலு தேவி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதும் மகேஷ் சந்திரா உடனடியாக வெளியே ஓடிச் சென்று அங்கு நின்றிருந்த ஒரு காருக்குள் இருந்தவரிடம் ஏதோ சொல்கிறார். பின்னர் அந்த காரும் புறப்பட்டு சென்றது.
திடுக்கிடும் வாக்குமூலம்
இதனைத் தொடர்ந்து, மகேஷ் சந்திராவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீஸார் நடத்தினர். அப்போது தனது மனைவியை இன்சூரன்ஸ் பணத்துக்காக திட்டம் போட்டு கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில், "என் மனைவிக்கும் எனக்கும் 2015-ம் ஆண்டு திருமணம் ஆனது. எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்தின் போது என் மனைவியின் பெற்றோர் தருவதாக கூறிய வரதட்சணையை கொடுக்கவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் ஒருகட்டத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
இன்சூரன்ஸ் போட்டு கொலை
ஆனால், அப்படி கொலை செய்தால் எனக்கு எந்த லாபமும் இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே என் மனைவி பெயரில் ரூ.2 கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்தேன். இன்சூரன்ஸ் போட்டு ஒரு வருடம் ஆன பிறகுதான், சம்பந்தப்பட்டவர் உயிரிழந்ததற்கு பிறகு அந்த மொத்த தொகையும் கிடைக்கும். எனவே, அவரிடம் ஒரு வருடமாக அன்பாக இருப்பதை போல நடித்து வந்தேன். இந்நிலையில், கடந்த மாதத்துடன் இன்சூரன்ஸ் போட்டு ஒரு வருடம் ஆகிவிட்டதால், அவரை கொலை செய்ய கூலிப்படையை அமர்த்தினேன். பிறகு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அவரை கோயிலுக்கு செல்ல வைத்தேன். பின்னர் கூலிப்படையினர் காரை ஏற்றி அவரை கொலை செய்தனர்" இவ்வாறு மகேஷ் சந்திரா கூறினார். இதனைத் தொடர்ந்து, போலீஸார அவரையும், கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர்.