டிரெண்டை மாற்றுமா காங்கிரஸ்? மோடி இமேஜை நம்பி இறங்கும் பாஜக.. ராஜஸ்தானில் அனல் பறக்கும் தேர்தல் களம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே 200 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ மறைவால் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தைப் பொருத்தவரை அங்கே கடும் போட்டி நடைபெறுகிறது.
காங்கிரஸ்: அங்கே காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஆளும் கட்சியாக இருந்த போதிலும், அங்கே அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் மற்றும் உள்கட்சி பூசல் தொடர்கிறது. இருப்பினும், டெல்லி தலைமை தலையிட்ட நிலையில், தேர்தலில் இருவரும் இணைந்து பணியாற்றினர். இதுவரை நடந்ததை மறந்துவிட்டுத் தேர்தலை எதிர்கொள்ளுமாறு தலைமை கூறியதாகவும் அதை ஏற்றுக் கொண்டதாகவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்,
காங்கிரஸ் அரசு அசோக் கெலாட் அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி பணிகள், கொண்டு வந்துள்ள திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும், மாநிலத்தில் அசோக் கெலாட்டிற்கு தனி மரியாதை இருக்கிறது. அதுவும் கூட அக்கட்சிக்கு பிளஸ்ஸாக இருக்கிறது. மேலும், பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி "ஏழு உத்தரவாதங்கள்" என்ற அளித்த வாக்குறுதியும் நல்ல கவனத்தை வாக்காளர்களிடையே பெற்றுள்ளது.
பாஜக: மறுபுறம் பாஜக வழக்கம் போலப் பிரதமர் நரேந்திர மோடி இமேஜை வைத்துத் தேர்தலை எதிர்கொள்கிறது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரை டாப் தலைவர்கள் அனைவரும் பிரச்சாரத்திற்கு இறக்கப்பட்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட புகார்களை எடுத்து பிரச்சாரம் செய்கிறது. பாஜக வழக்கம் போல கடைசிக்கட்டத்தில் அங்கே மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது.
இதற்கிடையில், காங்கிரஸில் உட்கட்சி பூசல் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் நேற்று முதல்வர் கெலாட் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார். அதில் சச்சின் பைலட் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கெலாட்-பைலட் இடையே இருந்த மோதலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சரியான நேரத்தில் தலையிட்டுத் தீர்த்துள்ளதை இது காட்டுகிறது.
சச்சின் பைலட்: இருப்பினும், இருவருக்கும் இடையே மோதலை இருந்த நிலையில், அதை பாஜக தனது பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொண்டது. காங்கிரஸ் கட்சியில் சச்சின் பைலட்டுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். மேலும், அவரது தந்தை ராஜேஷ் பைலட்டை நடத்தியது போலவே சச்சின் பைலட்டையும் நடத்துவதாகச் சாடினார்.
இருப்பினும், இதற்கு சச்சின் பைலட் உடனடியாக பதிலடி கொடுத்தார். தனது தந்தை வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரனாகவே இருந்தார் என்று குறிப்பிட்ட சச்சின் பைலட், பிரதமர் மோடியின் பேச்சு உண்மைக்குப் புறம்பானது என்றும் மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தில் இருப்பதாகவும் கூறினார்.
கடும் போட்டி: இந்தத் தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள அனைத்து இடங்களிலும் பாஜக போட்டியிடுகிறது, அதேநேரம் காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளத்திற்கு ஒரு இடத்தை ஒதுக்கிவிட்டு மற்ற 199 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இவை தவிர சிபிஐ (எம்), ஆர்எல்பி, பாரத் ஆதிவாசி கட்சி, பாரதிய பழங்குடியினர் கட்சி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.
அங்கே இதுவரை காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் மாறி மாறியே ஆட்சியைப் பிடித்து வந்துள்ள நிலையில், அந்த நிலையை மாற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் காங்கிரஸ் இறங்குகிறது. அதேநேரம் தனது கடைசிக்கட்ட தீவிர பிரச்சாரத்தின் மீது பாஜக அதீத நம்பிக்கை வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications