பெருசா எதிர்பார்த்த ரேபிட் டெஸ்ட் கிட் சொதப்பல்.. தப்பு தப்பா ரிசல்ட்.. சோதனையை நிறுத்திய ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் நோய் பரவலை கண்டறிவதற்கு பெரிதும் உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரேபிட் கிட் கைவிட்டுவிட்டது. சரியான முறையில் ரிசல்ட் காட்டவில்லை என்று கூறி ராஜஸ்தான் அரசு ரேபிட் கிட் டெஸ்ட் கருவி மூலமாக சோதனை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது. இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆருக்கு) ராஜஸ்தான் அரசு தகவல் கொடுத்து உள்ளது.
பிசிஆர் எனப்படும் விரிவான பரிசோதனை ரிசல்ட் வருவதற்கு காலதாமதமாகும். ஆனால் ரேபிட் கிட் டெஸ்ட் என்பது அரைமணி நேரத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிவித்து விடும்.
தமிழகத்துக்கு முதற்கட்டமாக சுமார் 25,000 ரேபிட் கிட் வந்துள்ளன. இவை, மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம்
தமிழகத்தில், இந்த கருவி மூலம், பத்திரிகையாளர்கள் பலருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நிலைமை இப்படி இருக்க ராஜஸ்தானில் இந்த டெஸ்ட் கருவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா, இது பற்றி கூறுகையில், இந்த கிட்ஸ், துல்லியத்தன்மை வெறும், 5.4 சதவீதம் மட்டுமே. 90% அளவுக்காவது சரியான ரிசல்ட் கொடுக்கும் என்பதுதான் உறுதி மொழியாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

ஆய்வு
இந்த கருவியின் துல்லிய தன்மை பற்றி ஆய்வு செய்வதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருந்தியல் மற்றும் மைக்ரோபயாலஜி துறையை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழு ஆய்வு செய்தபோது தான் இந்த தகவல் தெரியவந்தது. அந்த கமிட்டி கொடுத்த பரிந்துரையை அடுத்து நாங்கள் உடனடியாக ரேபிட் கிட் மூலமாக பரிசோதனை செய்வதை நிறுத்தி விட்டோம்.

திருப்பி அனுப்பப்படும்
ஐசிஎம்ஆருக்கு இதுபற்றி கடிதம் எழுதியுள்ளோம். அவர்களின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை எங்கள் மாநிலத்தில் 168 பேருக்கு இந்த கிட் மூலமாக பரிசோதனை நடத்தி உள்ளோம். ஐ சி எம் ஆர் எங்களது குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டால் இந்த கருவிகள் அனைத்தும் திருப்பி அனுப்பி விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தரமில்லை
ரேபிட் கிட் கருவிகள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வாங்கப்பட்டுள்ளன. சீனப் பொருட்கள் தரமற்றவையாக உள்ளன என்பது உலகின் பெரும்பாலான நாடுகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்தியாவிலும் மருத்துவ உபகரண விஷயத்தில் இப்படியான ஒரு தரமற்ற தன்மை கண்டறியப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது நெகட்டிவ் என ரிசல்ட் வந்தவர்களுக்கு பிசிஆர் எனப்படும் விரிவான சோதனை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications