இந்தியா டுடே குழுமத்தில் கன்சல்டிங் எடிட்டரானார் ராஜ்தீப் சர்தேசாய்!
டெல்லி: சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த ராஜ்தீப் சர்தேசாய் இன்று முதல் இந்தியா டுடே குழுமத்தில் 'கன்சல்டிங் எடிட்டர்' என்ற பொறுப்பில் இணைந்துள்ளார்.
சி.என்.என். - ஐ.பி.என். தொலைக்காட்சி டிவி 18 நெட்வொர்க் குழுமத்தைச் சேர்ந்தது. இக்குழுமத்தை ரூ4 ஆயிரம் கோடிக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கடந்த ஜூலை மாதம் வாங்கியது.

ஐ.பி.என்-ல் இருந்து விலகல்
இதைத் தொடர்ந்து சி.என்.என். - ஐ.பி.என். தலைமைச் செய்தி ஆசிரியர் சர்தேசாய் மற்றும் அவரது மனைவி சகரிகா கோஷ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அக்குழுமத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியன் சுவாமியின் மகள் சுகாசினி ஹைதர் இந்து நாளிதழில் பணிக்கு சேர்ந்தார்.

இந்தியா டுடே குழுமத்தில்..
இந்த நிலையில் சர்தேசாய் இந்தியா டுடே குழுமத்தில் இணைந்துள்ளார். அவருக்கு தற்போது "கன்சல்டிங் எடிட்டர்" என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்- இந்தியா டுடே
இது தொடர்பாக இந்தியா டுடே குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட தேசிய, சர்வதேச விருதுகள் பெற்றவர் ராஜ்தீப் சர்தேசாய். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளது.

புதிய அத்தியாயம்
இதேபோல் ராஜ்தீப் சர்தேசாய் தமது இணையப் பக்கத்தில், 1988ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் இருந்து வருகிறேன். கடந்த 3 மாத கால ஓய்வு வாழ்க்கையையும் ஊடகத்துறையையும் திரும்பி பார்க்க வைத்தது. இப்போது புதிய தெம்புடன் இந்தியா டுடே குழுமத்தில் இணைந்திருக்கிறேன். விரைவில் தேர்தல் தொடர்பான புத்தகம் வெளிவர இருக்கிறது. எனது பயணத்தில் இது புதிய அத்யாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications