குஜராத் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான வாக்குப் பதிவு நிறைவு... அகமது படேல் என்னவானார்?
குஜராத் ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி வாய்ப்பை பெறுவாரா அல்லது நழுவவிடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அகமதாபாத்: குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத்தில் 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் குஜராத்தில் இன்று தொடங்கியது. 182 பேர் கொண்ட குஜராத் சட்டசபை உறுப்பினர்களில் 176 பேர் 3 ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர்.
பாஜக சார்பில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அகமது படேலும் போட்டியிட்டனர்.வேட்பாளர்கள் வெற்றி பெறத் தேவையான வாக்குகள் 45. பாஜகவால் 2 பேரையும் காங்கிரஸால் ஒருவரையும் வெற்றி பெறச் செய்ய முடியும்.
122 எம்எல்ஏ
122 எம்எல்ஏ-க்கள் கொண்ட பாஜகவுக்கு இரு உறுப்பினர்களை வெற்றி அடைய செய்வது எளிதான காரியமாகும். தற்போது போட்டியே மூன்றாவது உறுப்பினரான அகமது படேலுக்கும் ராஜ்புட்டுக்கும்தான்.
கட்சி தாவிய ராஜ்புத்
அண்மையில் காங்கிரஸில் இருந்து தாவிய ராஜ்புத்துக்கு ஆதரவாக வாக்களிக்க போதிய உறுப்பினர்கள் இல்லை. இருந்தபோதிலும் காங்கிரஸுக்குள் குட்டையைக் குழப்பி அகமது படேலை தோல்வி அடையை வைக்க பாஜக கடுமையாக முயற்சித்தது.
51 காங் எம்எல்ஏ-க்கள்
57 -ஆக இருந்த காங்கிரஸ் கட்சியின் பலம் 6 உறுப்பினர்கள் கடந்த ஜூலை 28-இல் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அது 51-ஆக குறைந்தது. அந்த 6 பேரில் மூன்று பேர் பாஜகவில் இணைந்து விட்டனர். 44 காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்த சில நாள்களாக பெங்களூர் தங்கும்விடுதியில் தங்கவைக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை தான் குஜராத் மாநிலத்துக்கு அழைத்து வரப்பட்டனர். எனினும் காந்தி நகரில் இருந்து 80 கி.மீ தூரம் உள்ள இடத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
அகமது படேல் வெற்றி பெறுவாரா?
அகமது படேலின் வெற்றி வாய்ப்பு என்பது மதில் உள்ள பூனை போல் உள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சங்கர் சிங் வகேலா, மற்ற எம்எல்ஏ-க்களை கட்டுப்படுத்தி பாஜகவுக்கு வாக்களித்திருப்பரோ என்ற கவலை காங்கிரஸுக்கு உண்டு. இன்னொரு பிரச்சினை 2 எம்எல்ஏ-க்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி இவர்களுக்கு வாக்களித்திருக்குமா என்பது சந்தேகம்தான். எனவே அகமது படேல் வெற்றி பெறுவாரா அல்லது தோல்வி அடைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.