அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜகவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. குறிப்பாக, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து வெளியாகும் தகவல்கள் அவரது ஆதரவாளர்களை குஷிப்படுத்தும் வகையில் தான் உள்ளன. இந்நிலையில் அண்ணாமலை, அவர் பாஜகவில் அதிருப்தியுடன் செயல்பட்டு வரும் நிலையில், விரைவில் தனிக்கட்சி தொடங்கலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர். மேலும், கொள்கை, கொடி, சின்னம் என சில புகைப்படங்களை பரப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்காக கடந்த சில ஆண்டுகளில் மிக தீவிரமாக பணியாற்றிய தலைவர்களில் முக்கியமானவராக அண்ணாமலை பார்க்கப்பட்டார். இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி ஆதரவை உருவாக்கியிருந்த அவர், பல்வேறு விவகாரங்களில் நேரடியாக திமுக அரசை எதிர்த்து பேசினார்.
குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், குடும்ப அரசியல் போன்ற விவகாரங்களில் தொடர்ந்து தாக்குதலான அரசியல் செய்து வந்தார். அவரது தலைமையில் பா.ஜ.க. தமிழகத்தில் பெரிய எழுச்சியை பெற்றதாகவே கட்சியின் ஒரு பகுதி நிர்வாகிகள் கருதினர்.

2026 சட்டமன்றத் தேர்தல்
ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியை உறுதி செய்வதற்காக பாஜக தேசிய தலைமை அவரை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றியது. இது அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு, அண்ணாமலை கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கேற்காமல் இருந்து வருகிறார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நிகழ்ச்சிகளை தவிர்த்து, தேசிய அளவிலான பல முக்கிய கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அண்ணாமலை
அவரை சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளுக்கான பொறுப்பாளராக நியமிக்க முயற்சி செய்யப்பட்ட போதும், அதனை அவர் ஏற்கவில்லை என தகவல்கள் வெளியாகின. இருந்தாலும், மாநிலம் முழுவதும் 95-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்து கட்சிக்காக தீவிரமாக செயல்பட்டார். ஆனால், சட்டமன்ற தேர்தலிஉல் பாஜக படுதோல்வியைச் சந்த்த்தது. இதனால், "அண்ணாமலையை ஓரங்கட்டியதே பாஜகவின் தேர்தல் தோல்விக்குக் காரணம்" என்ற கருத்தும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
பாஜக
இதற்கிடையே, மே 26 முதல் 29 வரை பாஜக தேர்தல் தோல்வி தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த ஆலோசனை கூட்டங்களில் அண்ணாமலை பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அப்போது அண்ணாமலையில் தென்கொரியா செல்ல திட்டமிட்டுள்ளார்.
தனிக்கட்சி
இந்த சூழலில்தான், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். "புதிய தமிழகம் ஜனதா கட்சி" என்ற பெயரில் புதிய கட்சிக்கான சின்னம், கொடி, கொள்கைகள் போன்றவை இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்களை கொண்ட கொடியில் வட்ட வடிவத்துக்குள் அண்ணாமலையின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது.
புதிய தமிழகம் ஜனதா கட்சி
அதேபோல், அந்த சமூக வலைத்தள பதிவுகளில் கட்சியின் நோக்கம், இலக்கு, உறுப்பினர் சேர்க்கை தகுதி, கொள்கைகள் உள்ளிட்ட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஊழலற்ற நிர்வாகம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளுக்கு நேரடி ஆதரவு, அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்பாடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம், புதிய தொழில் முதலீடுகள் போன்ற வாக்குறுதிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
அண்ணாமலை நற்பணி மன்றம்
மேலும், "அகில இந்திய அண்ணாமலை நற்பணி மன்றம்" என்ற பெயரிலும் சில போஸ்டர்கள் பரவி வருகின்றன. "அறிவு, துணிவு, நேர்மை... தமிழக அரசியலின் புதிய அடையாளம்" என்ற வாசகத்துடன் அண்ணாமலையின் புகைப்படமும், சில தொலைபேசி எண்களும் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
புதிய அரசியல் கட்சி
அவர் தனிக்கட்சி தொடங்கப் போகிறாரா? அல்லது இது ஆதரவாளர்களின் முயற்சியா? என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை. அதே நேரத்தில், அவர் இந்த வைரல் பிரச்சாரங்களை மறுத்தும் பேசவில்லை என்பதால், "அண்ணாமலை புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவுக்கு வந்து விட்டார்" என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.














Click it and Unblock the Notifications