ஆகவே.. ‘அம்மா’விற்கு பாரத ரத்னா கொடுங்கள்.. ராஜ்ய சபா அதிமுக எம்பி பேச்சு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ராஜ்ய சபாவில் அதிமுக எம்பி கோரியுள்ளார். மேலும் நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
டெல்லி: 'அம்மா'விற்கு யாரும் ஈடில்லை என்றும் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றும் ராஜ்ய சபாவில் எம்பி விஜிலா கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31ம் தேதி தொடங்கியது. நேற்று எம்பி. அகமது திடீரென மரணம் அடைந்த நிலையில், அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இன்று லோக் சபா ஒத்தி வைக்கப்பட்டது. என்றாலும் ராஜ்ய சபா வழக்கம் போல் இயங்கியது.
இன்றைய ராஜ்ய சபா கூட்டத்தில், அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், " யாரும் அம்மாவுக்கு ஈடாக முடியாது . அன்பும் கருணையும் கொண்டவர். ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக தனது கடைசி மூச்சுவரை ஓய்வின்றி உழைத்தவர். தமிழகத்தின் இரும்புப் பெண்மணி. மேலும், அனைத்து விதமான வளர்ச்சிக்கும் வழிவகுத்தவர்.
அம்மாவின் அறிவுத் திறனுக்கும் நிர்வாகத் திறனுக்கும் இணையாக உலகில் எந்தத் தலைவர்களுமே இல்லை. முன்னுதாரணமாக விளங்கும் அவரது 32 ஆண்டு கால பொது வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும். அத்துடன், நாடாளுமன்றத்தில் அவருக்கு வெண்கல சிலை நிறுவவேண்டும். நோபல் பரிசுக்கு அவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும்" என்று கோரினார்.