கருப்புப் பண விவகாரம்.. உண்மையை சொல்ல என்ன பயம்?- மத்திய அரசுக்கு ஜெத்மலானி காட்டமான கடிதம்
டெல்லி: கருப்புப் பண விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்த கருத்துகளை கடுமையாக விமர்சித்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அருண் ஜேட்லி, சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளோரின் பெயர்ப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும், அப்போது காங்கிரஸ் தலைகுனிய நேரிடும் என்று கூறியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக அருண்ஜேட்லிக்கு ராம்ஜெத்மலானி கடுமையாக விமர்சித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின் இறுதியில் "பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்" என்ற குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார் ராம்ஜெத்மலானி. ராம்ஜெத்மலானியின் கடிதத்தில் இடம்பெற்றுள்ளதாவது:
தீபாவளி நாளில் இந்த கடிதம் எழுதுவதற்கு வருந்துகிறேன். கருப்புப் பணம் தொடர்பாக நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் வருத்தமளிக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ‘வெளிநாடுகளுடன் இந்தியா இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதுவே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாததற்கு காரணம்" என்று ஒரு தவறான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்த போது, எந்த ஒரு நிபந்தனையும் இன்றி நட்பு நாடுகளைச் சேர்ந்தவர் பணத்தை பதுக்கியோர் பட்டியலை ஜெர்மனி வெளியிடத் தயாராக இருந்தது என்பதை அறிவீர்கள். ஆனால் இந்தப் பட்டியலைப் பெற மத்திய அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
அதே நேரத்தில் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக நீங்களும், லோக்சபாவில் சுஷ்மா ஸ்வராஜூன் இருந்தீர்கள். நீங்கள் இருவரும் ஜெர்மனியைத் தொடர்பு கொண்டு அந்தப் பட்டியலைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதனால்தான் மற்றவர்களைப் போல நீங்களும் உண்மை வெளியே வந்துவிடக் கூடாது என்று செயல்பட்டதாக சந்தேகிக்கிறேன்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் முரண்பட்ட அறிக்கைகளை குழப்பமான வகையில் வெளியிட்டு வருகிறீர்கள். இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் நீங்கள் கடந்த ஜூலை மாதம் தெரிவித்த பதில்களும் முறையானதாக இல்லை என்பது வெட்ட வெளிச்சமானது. தற்போதும் நீங்கள் முன்னுக்குப் பின் முரணாக தெரிவித்திருக்கும் கருத்துகளால், தேர்தல் பிரசாரத்தின் போது மோடி அரசு கட்டியெழுப்பிய பிம்பத்தை நிர்மூலமாக்குவதாக இருகிறது.
நீங்கள் தெரிவித்த கருத்தின் மூலம் இந்த நாட்டை தற்கொலைக்கு இட்டுச் செல்வதுடன் மோடி இந்த நாட்டை தவறாக வழிநடத்துவதை அம்பலப்படுத்துவதாகவும் இருக்கிறது. மிகப் பெரிய கிரிமினல்கள் தப்பிச் செல்வதற்கு உதவுவதாக இருக்கிறது.
ஜெர்மன் மற்றும் சுவிஸ் நாடுகளில் நீங்கள் பெற்றிருக்கும் பெயர்களை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு முதலில் அனுப்பி வையுங்கள். அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.
இவ்வாறு ஜெத்மலானி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.