ராமநவமி கொண்டாட்டத்தில் அத்துமீறல்.. மசூதி மீது காவி கொடியை பறக்கவிட்ட இந்துத்துவா அமைப்பினர்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டத்தில் இந்துத்துவா அமைப்பினர் அத்துமீறியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொண்டாட்டத்தின்போது, மசூதியில் இந்துத்துவா அமைப்பினர் காவி கொடியை ஏற்றியுள்ளனர்.
மசூதி மீது காவி கொடியை ஏற்றிய இந்துத்துவா அமைப்பினர், மசூதியை இடித்துவிட்டு அங்கு கோயில் கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாகிராஜ் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் உத்தரப் பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கொண்டாடட்டத்தில பங்கேற்றிருந்த இந்துத்துவா அமைப்பினர், பிரயாகிராஜில் உள்ள சையது சலார் காஜி மசூதி மீது திடீரென ஏற தொடங்கினர். ஜெய் ஸ்ரீராம் முழக்கங்களுடன் மசூதி மீது ஏறிய அவர்கள், அங்கிருந்த பச்சை கொடியை பிடுங்கிவிட்டு அதற்கு பதிலாக காவி கொடியை பறக்கவிட்டிருக்கின்றனர்.
பின்னர் மசூதியிலிருந்து பைக் பேரணி நடத்தியிருக்கிறார்கள். இது தொடர்பான வீடீயோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது. பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. மகாராஷ்டிராவின் ரஹூரி மாவட்டத்தில் மார்ச் 26-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. ஹஸ்ரத் அமீது சிஷ்டி என்கிற மசூதி மீது திடீரென ஏறிய இந்துத்துவா கும்பல், மசூதி மீது பறந்துக்கொண்டிருந்த பச்சை கொடியை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக காவி கொடியை பறக்கவிட்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தின்போது அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களும் இந்து-இஸ்லாமியர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பவம் நடந்த பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும் இதுவரை இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தோடு கல்வீச்சு சம்பவமும் நடந்திருக்கிறது. அதன் மீதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications