சோனியா என் யோசனையை கேட்கவில்லை... கேட்டிருந்தால் காங்கிரஸ் சரிந்திருக்காது.. பரிதாபபடும் அத்வாலே..!
போபால்: மன்மோகன் சிங்குக்கு பதிலாக சரத்பவாரை பிரதமராக்க வேண்டும் என கடந்த 2004-ம் ஆண்டு சோனியாவுக்கு தாம் அளித்த யோசனையை அவர் ஏற்க மறுத்ததன் விளைவே, இன்று காங்கிரஸ் கட்சி இந்தளவுக்கு பலவீனமடைய காரணம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியிருக்கிறார்.
மேலும், அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் வர முடிகிற போது இந்திய பிரதமராக சோனியா ஏன் வரக்கூடாது என வினவியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து பாஜக கூட்டணியில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயை பொறுத்தவரை மனதில் தோன்றும் கருத்துக்களை ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர். கோ கொரோனா கோ கொரோனா என பாட்டுப்பாடி கொரோனாவை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முயற்சித்தவர். இப்படி பல சிறப்புகளை கொண்ட இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்த கருத்து தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக வர முடிகிற போது, சோனியாகாந்தி ஏன் இந்திய பிரதமராக வரக்கூடாது என வினவியுள்ளார். ராஜீவ்காந்தியின் மனைவி, இந்திய குடியுரிமை பெற்ற நபர், மக்களாக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என பல தகுதிகள் இருந்தும் வெளிநாட்டவர் என்ற எதிர்ப்பால் கடந்த 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார் சோனியா.
இந்நிலையில் இப்போது அது தொடர்பான கருத்தை பதிவு செய்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
மேலும், 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங்கிற்கு பதிலாக சரத்பவாரை பிரதமராக்க வேண்டும் என சோனியாவுக்கு தாம் யோசனை தெரிவித்ததாகவும் ஆனால் அதை அவர் கேட்காமல் மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார் எனவும் தெரிவித்துள்ளார்.
சரத்பவாரை பிரதமராக்கியிருந்தால் காங்கிரஸ் கட்சி இன்று இந்தளவுக்கு சரிவை சந்திருக்காது என்றும் கட்சியை சோனியாவால் காப்பற்ற முடிந்திருக்கும் எனவும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் மேலிடத்துடன் மனக்கசப்பில் இருக்கும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் விரைவில் பாஜகவில் இணையலாம் என்ற தகவலையும் அவர் கூறினார்.
கேப்டன் அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தால் பஞ்சாப்பில் பாஜக ஆட்சியை பிடிப்பதுடன் அம்மாநிலத்தில் வலுப்பெறும் எனவும் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். குடியரசுக் கட்சியின் நிறுவனத் தலைவராக இருக்கும் இவர் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சரவையில் இருக்கிறார்.
பாஜக சாதியை விரும்பவில்லை என்றால்.. இதை செய்ய தயாரா? பகிரங்க சவால் விட்ட கி வீரமணி