மணமான 3 நாளில் சிதைந்த பெண்ணின் வாழ்க்கை.. சீரழித்த சாமியார்.. நடு ரோட்டில் விட்ட கணவர்!
கொப்பல்: கர்நாடகாவில் திருமணமான 3வது நாளில் புதுப்பெண்ணை கடத்தி, சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்த மடாதிபதியைப் போலீசார் தேடி வருகின்றனர். அதை விடக் கொடுமை, அந்தப் பெண்ணை அவரது கணவர் கைவிட்டு விட்டார் என்பதுதான்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரா கிராமத்தை சேர்ந்தவர் லதா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கொப்பல் அருகே ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 3-வது நாளில் லதா, தனது கணவருடன் கிராமத்தில் உள்ள குலதெய்வமான ராவணகி கரிபசப்பா கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு சாமி தரிசனம் செய்த புதுமணத் தம்பதி, பின்னர் அருகில் இருந்த மடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியிடம் புதுமணத் தம்பதி ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர். அப்போது லதாவின் அழகில் மயங்கிய ஹனுமந்தப்பா பாகலி, அவரை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, லதாவின் கணவரை கடைக்கு சென்று பூஜை பொருட்கள் வாங்கச் சொன்ன ஹனுமந்தப்பா, லதாவை வசியம் செய்து கடத்தியுள்ளார். கடைக்குச் சென்று திரும்பிய லதாவின் கணவர், மனைவியைக் காணாது பல இடங்களில் தேடியுள்ளார். இறுதியில் மனைவியைக் காணவில்லை என ஹனுமந்தப்பாவிடமே சென்று மனைவி மாயமானது குறித்து முறையிட்டுள்ளார்.
அவரும் சில சிறப்பு பூஜைகள் செய்து லதாவைக் கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்துள்ளார். பின்னர், கொப்பல் அருகே உள்ள மாளேமல்லேஸ்வரா கோவிலில் லதா இருப்பதாக அவரது கணவரிடம் ஹனுமந்தப்பா கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த கோவிலுக்குச் சென்ற லதாவின் கணவர், அங்கு லதாவைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். ஆனால், திருமணம் ஆன 3ம் நாளிலேயே மாயமானது தொடர்பாக லதாவிடம் அவர் விசாரித்துள்ளார்.
இதையடுத்து லதா, தன்னை மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலி வசியம் செய்து கடத்திச் சென்று ஒரு தங்கும் விடுதியில் சிறை வைத்து 4 நாட்களாக பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், லதாவிடம் இனிமேல் நான் உன்னுடன் வாழமாட்டேன் என்று கூறி அவரை நடுரோட்டில் விட்டு சென்றுவிட்டார். செய்வது அறியாது தவித்த லதா, இது தொடர்பாக கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தார்.
அதில், தன்னை மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலி என்பவர் தன்னை வசியம் செய்து பலாத்காரம் செய்து விட்டார். இதை அறிந்த எனது கணவரும் என்னை கைவிட்டுவிட்டார். எனவே, மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என லதா தெரிவித்துள்ளார்.
அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரிக்க கொப்பல் புறநகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கொப்பல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியை வலைவீசி தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications